பாஜக, மஜத '40 தலைகள்' கூண்டோடு காங்கிரஸுக்கு படையெடுப்பு-பட்டியல் ரெடி-பகிரங்கமாக அறிவித்த டிகேஎஸ்!
பெங்களூர்: பாஜக மற்றும் மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சிகளின் 40 முக்கிய தலைவர்கள் காங்கிரஸில் இணைய தயாராக உள்ளதாக கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் மாநில துணை முதல்வருமான டிகே சிவகுமார் அறிவித்திருப்பது பரபரப்பை உருவாக்கி உள்ளது.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் நெருக்கம் காட்டியது. பின்னர் டெல்லிக்கு மகன் நிகிலுடன் சென்ற முன்னாள் முதல்வர் குமாரசாமி அமித்ஷா, ஜேபி நட்டாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகாரப்பூர்வமாக இணைந்தது.

தலை தெறிக்க ஓடிய தலைவர்கள்: ஆனால் டெல்லியில் இருந்து குமாரசாமி, கர்நாடகா திரும்புவதற்குள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் ஆளைவிட்டால் போதும் என்று தப்பி ஓடி தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டனர். பாஜகவுடனான கூட்டணிக்கு எதிராகத்தான் இப்படி ஆளுக்கு ஒரு திசையில் ஆளாய் பறந்து ஓடினர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள். கர்நாடகா மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் சிஎம் இப்ராஹிம் கூட சில நாட்கள், தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருந்தார் என்றால் நிலைமை எவ்வளவு விபரீதமாகி இருக்கிறது என புரிந்து கொள்ள முடியும்.
கூண்டோடு விலகிய முஸ்லிம்கள்: கர்நாடகாவில் குமாரசாமி கால் வைத்த நாள் முதலே, மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து கொத்து கொத்தாக முஸ்லிம் தலைவர்கள், கட்சியின் முஸ்லிம் நிர்வாகிகள் வெளியேறி காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். இதனால் கடுப்பாகிப் போன குமாரசாமி, முஸ்லிம்களால் நான் ஜெயிக்கவில்லை. முஸ்லிம்கள் எங்களை ஏற்கவும் இல்லை என்றெல்லாம் பேசினார். இதற்கு குமாரசாமி கட்சியின் முஸ்லிம் தலைவர்களே புள்ளி விவரங்களுடன் பதிலடியும் கொடுத்தனர்.
பாஜகவிலும் கடும் அதிருப்தி: அத்துடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்தது பாஜகவிலும் பிரளயத்தை ஏற்படுத்திவிட்டது. எங்களை தோற்கடித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் எப்படி கை கோர்ப்பது என்கிற கோபத்தில் பாஜக எம்.எல்.ஏக்களும் காங்கிரஸை நோக்கி கரம் நீட்டத் தொடங்கிவிட்டனர்.
காங்கிரஸ் நோக்கி படையெடுப்பு: தற்போது பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் இருந்து காங்கிரஸுக்கு ஓடிவரும் படலம் தொடங்கிவிட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாஜி எம்.எல்.ஏ. எச்கே குமாரசாமி (சிக்கமகளூர், கடூர் தொகுதி), பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ராமப்பா லமானி (பெலகாவி, சிரஹட்டி தொகுதி) ஆகியோர் பெங்களூரில் டிகே சிவகுமாரை சந்தித்து காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இப்பவரைக்கும் 40 தலைகள் ரெடி: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவகுமார், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் இருந்து காங்கிரஸில் இருந்து இணைய பலரும் விருப்பம் தெரிவிக்கின்றனர். முதலில் உள்ளூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி அவர்களது ஒப்புதலுடன் பிற கட்சிகளில் இருந்து வருவோரை சேர்த்து வருகிறோம். கர்நாடகாவின் பீதர் முதல் சாம்ராஜ் நகர் வரை ஒவ்வொரு தொகுதியிலும் இருந்தும் இந்த கட்சிகளின் மூத்த தலைவர்கள் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் 40 'தலைவர்கள்' தங்களது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இணைய தயாராக உள்ளனர். கர்நாடகாவில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியினர் உட்பட 100க்கும் மேற்பட்டோரும் காங்கிரஸுக்கு வர தயாராகிவிட்டனர். இவர்கள் அனைவருமே விரைவில் காங்கிரஸில் இணைய உள்ளனர். இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.












Click it and Unblock the Notifications