சாதாரண வயிற்று வலியில் தொடங்கி..5 ஆண்டுகள் மருத்துவமனையில் இருக்கும் பெண்.. 6 கோடி ரூபாய் பில்
பெங்களூரு: சாதாரண வயிற்றுவலிக்காக மருத்துவமனைக்குச் சென்ற பெண், ஐந்து ஆண்டுகளாக அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த பூனம் தனது 28ஆவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். ஆனால், அதன் பின் பிறந்த நாள், திருமண நாள் என அனைத்தையும் நான்கு சுவருக்குள் மருத்துவமனையிலேயே பூனம் 'கொண்டாடி' வருகிறார்.
முதலில் சாதாரணமாக வயிற்று வலிக்காக மருத்துவமனைக்குச் சென்ற பூனம், இத்தனை ஆண்டுகள் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். சில வாரங்களுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டார் என மருத்துவர்கள் கூறிய பிறகும் கூட, தனது விடா முயற்சியால் மருத்துவர்களையே ஆச்சரியப்படுத்தி வருகிறார் பூனம்.

வயிற்று வலி
சரியாக 1921 நாட்களுக்கு முன், 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பெங்களூருவிலுள்ள மணிப்பால் மருத்துவமனைக்குச் சாதாரண வயிற்று வலிக்காக பூனம் சென்றிருந்தார். அப்போது, அவருக்குக் குடலில் கசிவு இருப்பதாகக் கூறி ஆப்ரோசன் செய்யப்பட்டது. ஆனால், அப்போது முதலே பூனத்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே போகிறது. அதன் பின் பூனத்தின் பல்வேறு உறுப்புகளும் செயலிழந்தது.

பில் மட்டும் ஆறு கோடி ரூபாய்
பூனத்தின் மருத்துவ குறிப்பு மட்டும் 11 பக்கங்களுக்கு மேல் செல்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்துள்ளனர். நான்கு பக்கங்கள் செல்லும் இவரது சிகிச்சை கட்டணமாக ஆறு கோடி ரூபாயை மருத்துவமனை பில் போட்டுள்ளது. இதில் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நபர்களில் உதவியுடன் சுமார் 1.34 கோடியை பூனத்தின் குடும்பத்தினர் செலுத்தியுள்ளனர்.

மருத்துவமனையில் தொடரும் சிகிச்சை
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முறை மருத்துவர்கள், பூனம் இனி உயிர் வாழ மாட்டார் என்றும் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படியும் கூறிவிட்டனர். இருப்பினும், மருத்துவமனையில் தவறாலும் அலட்சியத்தாலுமே பூனத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முறையான சிகிச்சை அளித்தால் பூனம் குணமடைவார் என்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்,

மருத்துவமனை நிர்வாகம்
பூனத்தை கவனித்துக் கொள்வதற்காகவே அவரது கணவர் ரெஜிஸ் நாயர் தனது மைக்ரோசாப்ட், ஐஎம்பி உள்ளிட்ட தனது வேலைகளை விட்டுவிட்டு ஒரு நிறுவனத்தின் ஆலோசகராகச் சேர்ந்துவிட்டார். தனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து ரெஜிஸ் நாயர் கூறுகையில், "இந்த மருத்துவமனையில் நுழையும் வரை பூனம் மிகவும் ஆரோக்கியமாகவே இருந்தார். குடல் கசிவு காரணமாகச் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையில் மிகப் பெரிய தவறை மருத்துவமனை நிர்வாகம் செய்துவிட்டனர். அதை மறைக்கவே அவர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

மருந்துகளை நிறுத்திய மருத்துவமனை
கடந்த 2016ஆம் ஆண்டு கோமாவில் இருந்து மீண்ட அவரது உடல்நிலை தொடர்ந்து முன்னேறி வந்தது. ஆனால், அந்த சமயத்தில் அவருக்கு வழங்கி வந்த மருத்துகளை அவர்கள் நிறுத்திவிட்டனர். அப்போது முதல் அவரது உடல்நிலை மோசமாகத் தொடங்கியது. மருத்துவர்கள் பல முறை கைவிரித்த பிறகும்கூட அவர் இப்போது நம்முடன் இருக்கிறார். அவருக்கு உரியச் சிகிச்சை அளித்தால் கண்டிப்பாக அவர் குணமடைவார்" என்றார்.

விசாரணை தேவை
பூனத்தின் தந்தை இந்திய ராணுவத்திற்காகச் சேவை புரிந்தவர். தனது மகளின் நிலை குறித்துப் பேசும்போது அவரது கண்ணில் கோபம் தெரிகிறது. தனது மகளின் இந்த நிலைக்கு மருத்துவமனையே காரணம் என்றும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இது குறித்துப் பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர் ஒருவர் கூறுகையில், "பொதுவாகக் குடல் கசிவால் பாதிக்கப்படுபவர்கள் ஒன்று முதல் மூன்று ஆண்டுகளில் குணமடைந்துவிடுவார்கள். ஐந்து ஆண்டுகள் மருத்துவமனையில் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை. இதில் ஏதோ மிகப் பெரிய தவறு நடந்துள்ளது, இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications