டிராபிக் ஜாம் என்றால் சும்மாவா..? ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஸ்வாகா! நம்ம பெங்களூருக்கு இந்த நிலைமையா?
பெங்களூரு: இந்தியாவில் அதிக டிராபிக் ஜாம் உள்ளிட்ட போக்குவரத்து இடையூறுகள் அதிகம் உள்ள நகரம் எனில் அது பெங்களூர்தான். இந்நிலையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், "பெங்களுர் நகரம் இந்த மோசமான டிராபிக் ஜாம் காரணமாக ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.20,000 கோடி இழப்பை சந்திக்கிறது" என்று தெரியவந்திருக்கிறது.
இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கேற்றவாறு உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் உருவாக்கப்படவில்லை என்று தொடர்ந்து உலக நாடுகள் சில விமர்சித்து வருகின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் எனில் மருத்துவமனை, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து ஆகியவை இதில் அடங்கும். இந்த லிஸ்ட்டில் முக்கியமானதுதான் சாலை போக்குவரத்து. அவசரத்திற்கு மருத்தவமனைக்கு போக வேண்டும் என்றால் கூட சாலை நன்றாக இருந்தால்தான் உயிரை காப்பாற்ற முடியும்.

ஆனால் இந்தியாவை பொறுத்த அளவில் சாலைகளின் தரத்தை இன்னமும் சிறப்பாக மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் சாலை வசதியை விரிவாக்கம் செய்ய வேண்டியது இருக்கிறது. சரி இப்படி எதுவும் செய்யாமல் இருந்தால் என்ன ஆகும்? இதற்கான விடையைதான் போக்குவரத்து நிபுணர் எம்.என்.ஸ்ரீஹரி மற்றும் அவரது குழுவினர் கொடுத்திருக்கின்றனர்.
அதாவது சாலை போக்குவரத்து சரி செய்யப்படாமல் இருப்பதால் ஏற்படும் டிராபிக் ஜாம் காரணமாக பெங்களூர் நகரம் ஆண்டுக்கு ரூ.19,725 கோடியை இழந்திருக்கிறது என்று இந்த குழு ஆய்வு செய்து கூறியுள்ளது. போக்குவரத்து தாமதம், நெரிசல், சிக்னல்கள் நிறுத்தம், நேர இழப்பு, எரிபொருள் இழப்பு போன்றவற்றால் இது ஏற்படுகிறது என்று குழு கூறியுள்ளது. இது தொடர்பாக குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாலை திட்டமிடல், மேம்பாலம், போக்குவரத்து மேலாண்மை, உள்கட்டமைப்பு பற்றாக்குறை போன்றவை குறித்து எங்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.
பெங்களூர் நகரத்தில் மொத்தமாக 60 பாலங்கள் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. ஆனாலும், தாமதம், நெரிசல், சிக்னல்களில் நிறுத்தம், வேகமாகச் செல்லும் வாகனங்களின் குறுக்கீடு, எரிபொருள் இழப்பு போன்ற காரணங்களால் சாலைப் பயனாளர்களுக்கு ரூ.19,725 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. புரியும்படி சொல்வதெனில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் செல்வதற்கு 2 மணி நேரம் ஆகிறது எனில், இந்த டிராபிக் ஜாம்தான் இதற்கு பிரதான காரணம்.
இந்த டிராபிக் ஜாம் இல்லையெனில் அந்த ஊழியர் 30 நிமிடங்களில் அந்த அலுவலகத்திற்கு சென்று சேர்ந்திருப்பார். எனவே மிச்சமாகும் 1.30 மணி நேரத்தில் அவர் கூடுதலாக வேலை பார்த்து பணம் சம்பாதித்திருக்க முடியும். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர் இந்த பணத்தை இழக்கிறார். இப்படியாக ஒவ்வொரு ஊழியரையும் கணக்கெடுத்து பார்த்தால் மொத்தம் ரூ.19,725 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. டிராபிக் ஜாமில் வெயிட் செய்யும் போது செலவாகும் எரிபொருள் உள்ளிட்ட இதர செலவுகளையும் சேர்த்தால் இந்த தொகை வருகிறது.

தற்போது பெங்களூர் நகரம் 88 சதுர கிலோமீட்டரிலிருந்து 985 சதுர கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. இருப்பினும் இதனை மேலும், 1,100 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்த வேண்டும். பெங்களூர் நகர சாலைகளின் மொத்த நீளம் 11,000 கி.மீ ஆனால் இது தற்போது இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றதாக இல்லை. மக்கள் தொகை அதிகரிப்பு, வேலை வாய்ப்பு பெருக்கம் போன்றவற்றுடன் உள்கட்டமைப்பு வளர்ச்சி பொருந்தவில்லை.
அதேபோல பெங்களூர் சாலைகளில் எங்கு பார்த்தாலும் வாகனங்கள் பார்க் செய்யப்பட்டுள்ளன. இது போக்குவரத்து நெரிசலுக்கு மற்றொரு முக்கிய காரணமாகும். இது தவிர போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். இது மட்டுமல்லாது தனியார் பேருந்து போன்றவற்றையும் அனுமதிக்க வேண்டும்" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications