பெங்களூர் சொகுசு ஓட்டலில் போதை மருந்து விருந்து- நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் உட்பட 5 பேர் கைது
பெங்களூர்: பெங்களூர் நட்சத்திர விடுதியில் போதை மருந்து விருந்தில் பங்கேற்றதாக இந்தி நடிகர் சக்திகபூர் மகனும் போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதருமான நடிகர் சித்தாந்த் உட்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு எம்.ஜி.சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் போதை மருந்து விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அத்துடன் நட்சத்திர விடுதியில் விருந்தில் பங்கேற்ற 35 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் இந்தி நடிகர் சக்திகபூர் மகன் நடிகர் சித்தாந்த் உட்பட 5 பேர் போதை மருந்து உட்கொண்டிருந்தது உறுதியானது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து உல்சூர் போலீஸ் ஸ்டேஷனில் அடைத்தனர்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான சர்ச்சையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டவர் நடிகை ஷ்ரத்தா கபூர். அப்போது ஷ்ரத்தா கபூரிடம் போதைப் பொருள் தடுப்பு போலீசார் பல மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். ஆனால் ஷ்ரத்தா கபூருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை மருந்து விருந்து நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நாடு முழுவதும் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஆர்யன்கான் மீதான போதைப் பொருள் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது.