லோக்சபா தேர்தலுக்கு முன்பு பாஜகவை காலி செய்ய கர்நாடக அரசு ஸ்கெட்ச்! 40% ஊழலுக்கு எதிராக நீதிவிசாரணை
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு பணிகளுக்கு 40 சதவீத கமிஷனை பாஜக தலைவர்கள் பெற்றதாக புகார்கள் கூறப்படும் நிலையில் அதுபற்றி நீதி விசாரணை நடத்த அம்மாநில காங்கிரஸ் அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. அதெப்படி? வாங்க பார்ப்போம்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தது. முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்தார். இந்நிலையில் தான் கர்நாடகா அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் 40 சதவீத கமிஷன் பெற்றதாக பரபரப்பான புகார்கள் எழுந்தன. கமிஷன் குற்றம்சாட்டி ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அப்போது அமைச்சராக இருந்த கேஎஸ் ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி 40 சதவீத கமிஷன் அரசு என்று பாஜகவை விமர்சனம் செய்தது. மேலும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் புகார் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதாவது அரசு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்பவர்களிடம் 40 சதவீத பணத்தை கமிஷனாக பாஜகவினர் பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த பிரச்சனையை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்தது. அதோடு சமீபத்தில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலுக்கு 40 சதவீத கமிஷன் பாஜக அரசு என பெரிய அளவில் காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்தது. அதோடு முதல்வர் பசவராஜ் பொம்மை பெயரில் க்யூஆர் கோடு வடிவில் மாநிலம் முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு 40 சதவீத கமிஷன் கேட்டால் நேரடியாக புகார் அளிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த பிரசாரம் என்பது சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுத்தது. இதனால் தான் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளிலும், பாஜக 66 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில் பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது.
இதற்கிடையே இன்று கர்நாடகா அரசு சார்பில் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியின்போது 40 சதவீத கமிஷன் புகார் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின்போது அரசு துறைகள் சார்பில் முக்கிய ஆவணங்கள் இந்த விசாரணை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மேலும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் விசாரணை குழுவிடம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் இருக்கும். இதனால் இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. அதோடு இந்த ஒரு உத்தரவு மூலம் காங்கிரஸ் கட்சி ஒரே கல்லில் 2 மாங்காயை தட்டியுள்ளது.

அதாவது கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தவுடன் பாஜகவின் கமிஷன் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது. அதன்படி தற்போது நீதி விசாரணை நடத்த கர்நாடகா காங்கிரஸ் அரசு உத்தரவிட்டதன் மூலம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
2வது விஷயம் என்னவென்றால் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய நீதி விசாரணை என்பது அவர்களுக்கு எதிராக திரும்பலாம். இதனால் சட்டசபை தேர்தல் போலவே நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸை மக்கள் அதிக இடங்களில் வெற்றி பெற வைப்பார்கள் என அக்கட்சியினர் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications