குடிக்கவே தண்ணி இல்ல- கார் கழுவ தண்ணி கேட்குதா? பெங்களூரில் 22 குடும்பங்கள் மீது பாய்ந்தது நடவடிக்கை
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூரில் மிக மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவும் நிலையில், அங்கே குடிநீரை வீணடித்ததாக 22 குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் கடந்த சில காலமாகத் தண்ணீர் பஞ்சம் உச்சத்தில் இருக்கிறது. கோடைக் காலம் ஆரம்பிக்கும் முன்பே இந்த தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் சம்மரில் நிலைமை மேலும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது.

இதனால் அங்கே தண்ணீரைச் சேமிக்கவும் வீணடிப்பதைக் குறைக்கவும் பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே பெங்களூரில் குடிநீரை வீணடித்த குற்றத்திற்காக 22 குடும்பங்களுக்குப் பெங்களூர் மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது.
அபராதம்: கார்களை கழுவுவது, தோட்டம் ஆகியவற்றுக்குக் குடிநீரைப் பயன்படுத்திய 22 குடும்பங்களுக்குப் பெங்களூரு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். பெங்களூரில் மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்ற பெங்களூர் குடிநீர் வாரியத்தின் உத்தரவை மீறியதற்காக இந்த 22 குடும்பங்களுக்கும் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 22 வீடுகளிடம் இருந்து பெங்களூரு நீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் ரூ.1.1 லட்சம் அபராதம் வசூலித்துள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், குறிப்பாக தெற்கு பெங்களூரில் இருந்து அதிகபட்சமாக ரூ. 80,000 வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
கூடுதல் அபராதம்: இந்த மாத தொடக்கத்தில் தான் பெங்களூர் அதிகாரிகள் தண்ணீர் பஞ்சத்தை மனதில் வைத்து, குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. மேலும், வாகனங்களைக் கழுவுதல், கட்டுமானம், தேட்ட பராமரிப்பு ஆகியவற்றுக்கு குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதை அப்போதே அதிகாரிகள் தெளிவாகக் கூறியிருந்தனர். அதன்படியே இப்போது அபராதம் வசூலித்துள்ளனர். மேலும், ஒருவர் மீண்டும் மீண்டும் குடிநீரை வீணடித்தால் அவர்களிடம் கூடுதல் அபராதத்தையும் வசூலிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அறிவுறுத்தல்: ஹோலி கொண்டாட்டங்களின் போதும், காவிரி மற்றும் போர்வெல் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஹோட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளை நீர் பயன்பாட்டைக் குறைக்க ஏரேட்டர்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தி உள்ளனர். ஏரேட்டர்கள் என்பது தண்ணீரைக் காற்றுடன் கலந்து வேகமாகத் தரும். இதனால் நீர் பயன்பாடு குறையும்.
தண்ணீர் பற்றாக்குறை பெங்களூரை மிக மோசமாகப் பாதித்துள்ளது. நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் பல நிறுவனங்கள் ஒர்க் பர்ம் ஹோம் முறைக்குக் கூட மாறிவிட்டனர். இருப்பினும் வீடுகளிலும் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் பலரும் மால்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனர். மேலும், உணவுகளைச் சாப்பிடவும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டுக்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
நிலைமை மோசம்: இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரில் தினசரி சுமார் 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதை முதல்வர் சித்தராமையா கடந்த வாரம் உறுதி செய்திருந்தார். தற்போது நிலைமையைச் சமாளிக்க நகரின் மொத்தத் தேவையில் 1,470 எம்எல்டி தண்ணீர் காவிரி ஆற்றிலிருந்தும், 650 எம்எல்டி நீர் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும் பெறப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications