என்ன இது? பெங்களூர் வெள்ளத்தில் மக்கள் இப்படியா டிராவல் பண்றாங்க? ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட வீடியோ
பெங்களூர்: பெங்களூர் வெள்ளத்தில் மக்கள் கஷ்டப்பட்டு பயணிக்கும் வீடியோ ஒன்றை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து உள்ளார்.
பெங்களூரில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக நேற்று இரவு 3 மணி நேரத்தில் மட்டும் பெங்களூரில் 125 மிமீ அளவிற்கு மழை பெய்தது. இதனால் மழை பெய்த சில நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. நேற்று நாள் முழுக்க அங்கு இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பெங்களூரில் இன்னும் 4 நாட்களுக்கு விடாமல் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் பெய்து வரும் மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று அலுவலகம் சென்ற பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.

பெங்களூர்
பெங்களூரில் பெய்து வரும் இந்த மழையால் ஐடி ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். கார், பைக்கில் சென்றால் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படுகிறது. பலர் பைக்கில் சென்று வெள்ளத்தில் குழியில் விட்டு கீழே விழுந்த சம்பவங்கள் நடைபெற்றன. இன்னும் பலர் காரில் சென்று, காருக்குள் தண்ணீர் புகுந்து பாகங்கள் சேதம் அடைந்த சம்பவங்களும் நடைபெற்றன. இன்னும் பலரின் கார்கள் பார்கிங்கிலேயே தண்ணீர் புகுந்து சேதம் அடைந்து உள்ளது.

பெங்களூர் வெள்ளம்
இதனால் பொது மக்கள் பலர் கார் பைக்கில் வெளியே வரவே யோசிக்கிறார்கள். மீறி வந்தாலும் முட்டிக்கு மேல் இருக்கும் தண்ணீர் காரணமாக அவர்களால் காரை ஓட்டி செல்ல முடியவில்லை. இந்த நிலையில்தான் பலர் தற்போது டிராக்டரில் அலுவலகம் சென்று வருகின்றனர். ஆண்கள், பெண்கள் என்று ஐடி ஊழியர்கள் பலர் டிராக்டர் பின்னால் அமர்ந்து அலுவலகம் சென்று கொண்டு இருக்கின்றனர். தண்ணீரில் டிராக்டர் மட்டுமே பாதிப்பு இன்றி செல்லும் என்பதால் இப்படி பயணம் மேற்கொள்கின்றனர்.

பாதிப்பு
இன்னொரு பக்கம் ஒரு சில இடங்களில் வெள்ளத்தில் சிக்கி உள்ள ஐடி ஊழியர்கள் புல்டோசர் மூலம் மீட்கப்படுகின்றனர். புல்டோசர் கிரேன் மூலம் ஐடி ஊழியர்கள் பலர் மீட்கப்படுகின்றனர். இப்படி ஒரு வீடியோதான் இணையத்தில் வெளியாகி உள்ளது. வெள்ளத்தில் சிக்கி இருந்த ஊழியர்கள் சாலையை கடப்பதற்காக புல்டோசரின் முன் பக்கம் அமர்ந்து ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் சென்றனர். இந்த வீடியோக்கள் இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.

ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை தற்போது பகிர்ந்து உள்ளார். அதில், மனம் இருந்தால்.. மார்க்கம் உண்டு.. அதை நானும் தற்போது வழி மொழிகிறேன் என்று கூறி உள்ளார். நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளனர். அதே சமயம் பெங்களூர் போன்ற முன்னேறிய நகரம் ஒன்றில் இப்படி நடப்பது கஷ்டமாக இருக்கிறது. அரசின் தோல்வியை இது காட்டுகிறது என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications