‛‛இவன் வேற நாட்டுக்காரன்’’.. ராபிடோ பைக் ஓட்டுனரின் ஹெல்மெட் உடைப்பு-மிரட்டல்.. பரபரத்த பெங்களூர்!
பெங்களூரில் வெளிமாநிலத்தில் இருந்து வந்து கல்லூரி படிக்கும் மாணவர்கள் ராபிடோ பைக்குகள் ஓட்டி சம்பாதித்து வருகின்றனர்.
பெங்களூர்: பெங்களூரில் ராபிடோ பைக் இயங்கி வருகிறது. பெங்களூர் இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ராபிடோ பைக்கில் வாடிக்கையாளரை பிக்அப் செய்ய சென்ற ஒருவரை ஆட்டோ டிரைவர் மிரட்டி ஹெல்மெட்டை உடைத்து அவர் வேறு நாட்டை சேர்ந்தவர். எப்படி இங்கு ராபிடோ பைக்கை அதுவும் வெள்ளை நிற பதிவெண் பலகையுடன் ஓட்டலாம் என ஆக்ரோஷமாக கூறியுள்ளார். ஏற்கனவே வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பரவி வரும் தகவலுக்கு நடுவே இதில் பாதிக்கப்பட்ட நபர் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர் போல் உள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநில மக்களும் இன்னொரு மாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது மொழி, இனம் என்ற அடிப்படையில் சில சமூக விரோதிகள் வெளிமாநில மக்களை தாக்குவது நடந்து வருகிறது.
மேலும் சிலர் பிரிவினையை ஏற்படுத்தி கொந்தளிப்பை உருவாக்கும் வகையிலும் வேண்டும் என்றே போலியான வீடியோக்களை வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு பீகார் உள்ளிட்ட வடஇந்திய தொழிலாளர்களை தமிழர்கள் அடித்து விரட்டுவதாக வதந்தி பரவியது.

தமிழ்நாட்டில் ஆய்வு
இந்த வதந்தியை தொடர்ந்து பீகார் அதிகாரிகள் குழு தமிழகம் வந்து ஆய்வை துவங்கியது. பீகார் தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டது. அப்போது தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த விஷயத்தில் போலியான தகவல், வீடியோக்கள் வெளியிட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.

ஹெல்மெட் உடைப்பு
இந்நிலையில் தற்போது ட்விட்டரில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதில் பார்க்க வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர் போல் இருக்கும் நபர் Rapido பைக் ஓட்டுகிறார். அவரை வழிமறித்த ஆட்டோ டிரைவர் ஒருவர் மிரட்டல் விடுக்கிறார். மேலும் பின் இருக்கையில் அமரும் பயணிக்கான ஹெல்மெட் உள்ளிட்டவற்றை தரையில் வீசி ஆட்டோ டிரைவர் உடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆட்டோ டிரைவர் சொன்னது என்ன?
அதன்பிறகு ஆட்டோ டிரைவர் பேசும்போது, ‛‛நண்பர்களே இங்கே பாருங்கள். சட்டவிரோத ராபிடோ எப்படி இயங்குகிறது என்பதை பாருங்கள். வேறு நாட்டில் இருந்து வந்த நபர் எப்படி ராஜா போல் ராபிடோ ஒட்டுகிறார். ஆட்டோ துறை எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வேறு நாட்டை சேர்ந்த இவர் வெள்ளை நிற பதிவெண் பலகை வைத்திருந்தும் ஒரு பெண்ணை அழைத்த செல்ல இங்கு வந்துள்ளார்'' என கூறியுள்ளார்.

சம்பவத்துக்கான காரணம் என்ன?
அதாவது பெங்களூரில் ராபிடோ பைக்கில் தற்போது மக்கள் அதிகம் பயணிக்க தொடங்கி உள்ளனர். இதனால் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் வெள்ளைநிற பதிவெண் பலகையோடு ராபிடோ பைக் ஓட்டியதை கண்டிக்கும் வகையில் ஆட்டோ டிரைவர் இப்படி நடந்து கொண்டுள்ளார். இருப்பினும் ஆட்டோ டிரைவர் ஆக்ரோஷமாக ஹெல்மெட் உடைத்து ராபிடோ பைக் ஓட்டுபவரை தாக்க முயன்றது உள்ளிட்டவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

போலீஸ் விசாரணை
இந்த வீடியோ ட்விட்டரில் வெளியான நிலையில் பலரும் ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெங்களூர் மாநகர போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் பெங்களூர் இந்திராநகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சம்பவம் குறித்து இந்திரா நகர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றி பெங்களூர் மாநகர போலீஸ் தரப்பில் ட்விட்டர் பக்கத்தில், ‛‛சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்'' என கூறியுள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட நபர் இன்னும் போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை. வீடியோ வெளியானதால் போலீசார் தாமாகவே முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் தான் பாதிக்கப்பட்ட நபர் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டை சேர்ந்தவரா? என்பது உள்ளிட்ட முழுவிபரங்கள் தெரியவரும்.












Click it and Unblock the Notifications