தடுப்பூசி போடனுமா.. அப்போ கொரோனா டெஸ்ட் எடுங்க.. பெங்களூர் சிட்டியில் மாநகராட்சி அட்ராசிட்டி
பெங்களூர்:தடுப்பூசி போட செல்பவர்களையும் போட விடாமல் செய்வதற்கு பெங்களூரு மாநகராட்சி இப்போது செய்து வரும் கட்டாய கொரோனா டெஸ்ட் ஒரு காரணமாக மாறிவிட்டது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆரம்பத்தில் மக்களிடையே இருந்த தயக்கம் தற்போது நீங்கி அனைவரும் கூட்டம் கூட்டமாக சென்று தடுப்பூசிகளை போட்டுக் கொள்கிறார்கள்.
இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 5 சதவீதம் என்ற அளவில் கூட தாண்டவில்லை. அதே நேரம் முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது.

மாநகராட்சி கெடுபிடி
இந்த நிலையில் கூடுதலாக தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு நிர்வாகங்கள் ஊக்கம் அளிப்பதற்கு பதிலாக மக்கள் ஆர்வத்தை குறைக்கும் செயலில் ஈடுபட ஆரம்பிக்கின்றன. அதற்கு ஒரு உதாரணம் பெங்களூர் மாநகராட்சிக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பவர்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தினசரி இத்தனை பரிசோதனைகள் நடத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து மாநகராட்சி இவ்வாறு செயல்படுகிறது எனவே தடுப்பூசி மையங்களுக்கு செல்பவர்களை பரிசோதனை செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

80 வயது பெண் அனுபவம்
80 வயதாகும் சாந்தா என்ற பெண்மணி இதுபற்றி கூறுகையில் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த முகாமுக்கு சென்றதாகவும் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மையத்துக்குள் சென்றதாகவும் அப்போது மாநகராட்சி அதிகாரிகள் முதலில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துவிட்டு அதன் பிறகு தான் தடுப்பூசி போட முடியும் என்று கூறி அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார்.

மக்களை விரட்ட சதி
முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு எந்த ஒரு நோய் பாதிப்பும் ஏற்படாத நிலையில், இவ்வாறு இரண்டாவது டோஸ் போட செல்லும்போது என்னை அலைக்கழிப்பு செய்வது தடுப்பூசி போட செல்பவர்களை மனதளவில் தயக்கம் ஏற்படுத்த செய்யும் செயல் என்கிறார் அவர். தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதால் இதுபோல மக்களுக்கு தொல்லை கொடுத்து தடுப்புசி மையங்களுக்கு வரவிடாமல் செய்யலாம் என்று மாநகராட்சி புதிய புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறதா என்பது புரியவில்லை என்று சாந்தா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

டார்கெட் இருக்காம்
இதுபோன்ற செயல்பாடுகளால் ஊழியர்களின் நேரமும் திறமையும் வீணாகிப் போவதைத் தவிர வேறு எந்த பலனும் இல்லை என்கிறார் அவர். இதுபற்றி அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது தினசரி எத்தனை பரிசோதனை நடத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அந்த இலக்கை பூர்த்தி செய்வதற்கு இதுபோல பரிசோதனை செய்ய வேண்டும், இது மேலிடத்து உத்தரவு என்று தெரிவித்துள்ளனர்.

கட்டாயம் இல்லை
பெங்களூர் பெருநகர மாநகராட்சி தலைமை சுகாதார துறை அதிகாரி டாக்டர் விஜந்திரா இதுபற்றி கூறுகையில், யார் ஒருவரையும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது. அவ்வாறு மாநகராட்சி சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. வாய்மொழியாக கூட இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதுபோன்று நடந்து கொள்ளும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications