டேட்டிங் செயலி காதல்.. முதல் சந்திப்பிலேயே ஹோட்டலில் ரூம் போட்டு.. அடுத்த ட்விஸ்ட்! அரண்ட பெங்களூர்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இளைஞருக்கு மது, மயக்க மருந்து கொடுத்து மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். ஓவராக கடன் வாங்கிவிட்டு, கட்ட முடியாமல் சிரமப்பட்ட இந்தத் தம்பதி, இளைஞரிடம் இருந்து சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திருடியுள்ளனர். துரிதமாகச் செயல்பட்ட பெங்களூர் போலீஸ் குற்றவாளிகளை விரைந்து கைது செய்தனர்.
நவீனத் தொழில்நுட்பம் நமக்குப் பல்வேறு வழிகளில் பயன் தருகிறது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதேநேரம் இது பல வழிகளில் நமக்குக் குடைச்சலையும் கொடுக்கிறது. பலர் இதை வைத்து மோசடி மற்றும் திருட்டு சம்பவங்களிலும் கூட ஈடுபடுகிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் பெங்களூரில் நடந்துள்ளது.

இருவர் கைது
அங்கு வசித்து வந்த 25 வயது இளைஞரை, டேட்டிங் ஆப் மூலம் குறிவைத்து ஒரு தம்பதியினர் மோசடி செய்துள்ளனர். அந்த இளைஞருக்கு மயக்க மருந்து கொடுத்து, பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைத் திருடியதாக அந்தத் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
திடுக் தகவல்கள்
போலீசார் இது குறித்து நடத்திய விசாரணையில் பல பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது இந்தத் தம்பதி பல்வேறு லோன் செயலிகள் மூலம் அதிகத் தொகை கடன் வாங்கியுள்ளனர். அதைக் கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். கடன் கழுத்தை நெறிக்கவே அந்தக் கடனை அடைப்பதற்காகவே திருட்டு சம்பவங்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.
தொடர் திருட்டில் ஈடுபட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து கடனை அடைப்பதே இவர்கள் திட்டம். இருப்பினும், முதல் முயற்சியிலேயே அவர்கள் மாட்டிக் கொண்டார்கள். போலீசார் இப்போது அவர்களைக் கைது செய்துள்ளனர்.
என்ன நடந்தது
இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கவிப்பிரியா பிரபல டேட்டிங் செயலியில் ஒரு போலிக் கணக்கை உருவாக்கியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் பாதிக்கப்பட்ட இளைஞரைத் தொடர்பு கொண்டுள்ளார். இருவரும் சில காலம் டேட்டிங் தளத்திலேயே பேசியுள்ளனர். தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதி, இருவரும் இந்திரா நகரில் உள்ள ஒரு உணவகத்தில் சந்தித்துள்ளனர். அங்கு இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
அதிகளவில் மது குடித்துவிட்டதால் தனது ஹாஸ்டலுக்கு திரும்ப முடியாது என்று அந்த இளைஞர் கூறியிருக்கிறார். இதையடுத்து இருவரும் அருகிலுள்ள ஹோட்டலுக்கு சென்று, அங்கு ரூம் எடுத்துத் தங்கியுள்ளனர். தொடர்ந்து நள்ளிரவு 12:30 மணியளவில், அவர்கள் ஆன்லைன் புட் டெலிவரி செயலி மூலம் உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.
ரூ.6.89 லட்சம் அபேஸ்
உணவு சாப்பிட்ட பிறகு, கவிப்பிரியா அந்த இளைஞருக்குத் தண்ணீர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தத் தண்ணீரைக் குடித்ததும் மயக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பிறகு தனக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மறுநாள் காலை கண்விழித்துப் பார்த்தபோது, அவருடைய பொருட்கள் காணாமல் போயிருந்தன.
ரூ.3.22 லட்சம் மதிப்புள்ள 28 கிராம் தங்க செயின், ரூ.3.45 லட்சம் மதிப்புள்ள 30 கிராம் தங்க பிரேஸ்லெட், ரூ. 10,000 ரொக்கம் மற்றும் ரூ.12,000 மதிப்புள்ள ஹெட்செட் ஆகியவை காணாமல் போனது. அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 6.89 லட்சம் ஆகும். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளைஞர் இந்திரா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணை
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி, டேட்டிங் செயலி தரவுகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் இந்தக் குற்றத்திற்குப் பின்னால் இருந்த தம்பதியை அடையாளம் கண்டனர். அவர்கள் ஜோடியாகவே இந்தக் குற்றத்தைச் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார் இப்போது சிறையில் அடைத்துள்ளனர். இந்தத் தம்பதியினர் இதுபோல வேறு எதாவது குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து போலீசார் இப்போது விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications