நெஞ்சு பதறுது.. குழந்தைகளை வாஷிங் மெஷினில் போட்டு கொடூரம்.. டேகேரில் அதிர வைக்கும் சம்பவம்!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள டே கேர் எனப்படும் மழலையர் காப்பகத்தில் பிஞ்சு குழந்தைகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் அழுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை வாஷிங் மெஷினுக்குள் போடுவது, பாத்ரூமில் தனியாக அடைத்து வைப்பது போன்ற கொடூரமான செயல்களைச் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
இந்த காலத்தில் குழந்தைகளை 24*7 மணி நேரமும் பெற்றோரால் பார்த்து கொள்ள முடிவதில்லை. தாத்தா- பாட்டிகளும் உடன் வசிப்பதில்லை என்பதால் பெற்றோர்கள் பெரும்பாலும் டே கேர்களில் தான் குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். பெரும்பாலான டே கேர்களில் குழந்தைகளை நன்றாக பார்த்து கொண்டாலும், சில டே கேர்கள் மோசமாக உள்ளன.

கொடூரம்
அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ஒரு மழலையர் காப்பகத்தில்.. இரண்டு வயது சிறு குழந்தைகள் அழுததற்காக அவர்களுக்குக் குரூரமான தண்டனைகள் வழங்கப்பட்ட அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி பன்னாட்டு நிறுவனமான கேப்ஜெமினியின் பெங்களூர் வளாகத்தில் இயங்கி வரும் மழலையர் காப்பகத்தில் தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, குழந்தைகளைத் துன்புறுத்தியதாக ஐந்து பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மழலையர் காப்பகத்தை நேரடியாக கேப்ஜெமினி நிறுவனம் நடத்துகிறதா அல்லது கண்டிராக்ட் மூலம் வேறு நிறுவனம் நடத்துகிறது என்பது தொடர்பாக தெளிவாகத் தெரியவில்லை. அதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சித்திரவதை
அங்கு டே கேரில் அனுப்பப்பட்ட பிஞ்சு குழந்தைகள் பல்வேறு வழிகளில் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான நெஞ்சை உலுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அங்குள்ள பணியாளர்கள் தொடர்ந்து குழந்தைகளைத் துன்புறுத்தி வந்துள்ளதை விசாரணைக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். பெற்றோர்கள் தங்களின் பணி நேரத்தின் போது குழந்தைகளைப் பராமரிப்பதற்காக இந்த காப்பகத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.
வாஷிங் மெஷின்
ஆனால், அங்குள்ள ஊழியர்கள் குழந்தைகள் அழும்போது அவர்களை மிரட்டியுள்ளனர். மேலும், வாஷிங் மெஷினின் டிரம் பகுதிக்குள்ளே வலுக்கட்டாயமாக உட்கார வைத்துள்ளனர். இது மட்டுமின்றி குழந்தைகளை வெஸ்டர்ன் கழிப்பறை இருக்கை மீது அமர வைப்பதுடன், அவர்களின் வாயில் வாட்டர் ஜெட் ஸ்ப்ரே மூலம் தண்ணீரை வேகமாக அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். குழந்தைகள் அழுவதை நிறுத்த வேண்டும் என்பதற்காக அவர்களைப் பாத்ரூமிற்குள் பூட்டி வைப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
போலீஸ் வழக்குப்பதிவு
இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், காப்பக ஊழியர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இப்போது வெளியாகியுள்ள வீடியோயை ஆய்வு செய்யும் போலீசார், அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது கர்நாடக மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிடுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கேட்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் தனியாக விசாரணை நடத்தும் என தெரிகிறது.














Click it and Unblock the Notifications