"11 மணி மேல எப்படி நீங்க.." நடுரோட்டில் இளம் ஜோடியை பிடித்து! அத்துமீறி தொல்லை தந்த பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இரவு 11 மணிக்கு வெளியே இருந்த ஜோடிக்குத் தொல்லை கொடுத்துள்ள அம்மாநில போலீசார் அபராதமும் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், பல நேரங்களில் இரவு ரோந்தின் போது பொதுமக்களுக்கும் போலீசார் தொல்லை கொடுப்பதாகப் புகார்கள் இருக்கின்றன.
இதற்கிடையே அதுபோன்ற ஒரு சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான பெங்களூரில் நடந்துள்ளது. அங்கு வீதியில் நடந்து சென்றதற்காக இளம் ஜோடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் இளம் தம்பதி இரவு தங்கள் வீட்டின் அருகே உள்ள தெருவில் நடந்து சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார், தெருவில் அமைதியாக நடந்து சென்ற அந்ஜ ஜோடிகளைச் சட்டத்தை மீறிவிட்டதாகக் கூறி அபராதம் விதித்துள்ளனர். இரவு 11 மணிக்கு மேல் இப்படி நடந்து செல்வது விதிமீறல் எனக் கூறி அபராதம் விதித்துள்ளனர். இந்த அபராதத்தை அவர்கள் உடனடியாக செலுத்தியே தீர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அந்த தம்பதி பிறந்தநாள் கேக் வெட்டும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது இது நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அன்று என்ன நடந்தது என்பதை விவரிக்கும் கார்த்திக் பத்ரி என்ற அந்த நபர் தனது ட்விட்டரில் பல ட்வீட்களையும் பதிவிட்டுள்ளார்.

நடந்து சென்றபோது
கார்த்திக் பத்ரி தனது ட்விட்டரில், "நேற்று முன்தினம் இரவு நானும் என் மனைவியும் சந்தித்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது நள்ளிரவு 12:30 மணி. நானும் என் மனைவியும் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தோம் நாங்கள் மான்யதா டெக் பார்க் அருகே வசிக்கிறோம்). நாங்கள் எங்கள் வீட்டிற்கு சில மீட்டர் தொலைவில் வந்துவிட்டோம். அப்போது ஒரு பிங்க் நிற ஹொய்சலா ரோந்து கார் எங்கள் அருகே வந்து நின்றது. போலீஸ் சீருடையில் இருந்த இருவர் எங்களின் அடையாள அட்டையைக் காட்டச் சொன்னார்கள். எங்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. தெருவில் நடந்து செல்லும் தம்பதியரிடம் ஏன் அவர்கள் அடையாள அட்டையைக் கேட்க வேண்டும்?

என்ன நடந்தது
அப்போது எங்களிடம் மொபைல் மற்றும் கேக் பாக்ஸ் தவிர எதுவும் இல்லை. நல்வாய்ப்பாக எங்களிடம் மொபைலில் ஆதார் ஃபோட்டோக்கள் இருந்தன. அதை அவர்களிடம் காட்டினோம். அப்போது திடீரென அவர்கள் எங்கள் மொபைலை வாங்கி வைத்துக் கொண்டனர். நாங்கள் யார், எங்களுக்குள் என்ன உறவு, எங்கு வேலை செய்கிறோம், பெற்றோர் விவரங்கள் என அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டார்கள். இது சற்று அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் கூட அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தோம். அப்போது திடீரென ஒருவர் சலான் புத்தகம் போல் இருந்த ஒன்றை எடுத்து எங்கள் பெயர்களையும் ஆதார் எண்களையும் எழுத ஆரம்பித்தார்.

11 மணிக்கு மேல் நடக்கக் கூடாது
அப்போது தான் ஏதோ பிரச்சினை என உணர்ந்த நாங்கள், எதற்காகச் சலான் போடுகிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர், "இரவு 11 மணிக்கு மேல் சாலையில் நடக்க அனுமதியில்லை" என்றார். இது அபத்தமாகத் தெரிந்தாலும் கூட வேறு வழியில்லை என்பதால், அப்படி ஒரு விதி இருக்கிறதா? அதுபற்றி எங்களுக்குத் தெரியாது என அமைதியாகவே பதிலளித்தோம். அதற்கு போலீஸ், "உங்களைப் போன்ற படித்தவர்கள் இந்த விதிகளைத் தெரிந்திருக்க வேண்டும்" என்றார்கள். அவர்கள் சொன்னதில் நம்பிக்கை இல்லை என்றாலும், பிரச்சினை வேண்டாம் என முடிவு செய்தோம்.. இரவு வெகுநேரமாகிவிட்டது; எங்கள் மொபைலையும் வாங்கி வைத்துக் கொண்டனர்...

அபராதம்
அங்கு யாருமே இருப்பதாகவும் தெரியவில்லை. இதனால் விதியைப் பற்றி அறியாமல் இருந்ததற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டோம்.. இனி இதுபோல இரவில் வெளியே வர மாட்டோம் என உறுதியளித்தோம். அத்துடன் பிரச்சினை முடிந்துவிடும் என்றே நினைத்தோம்.. அவர்கள் இந்த தருணத்திற்காகக் காத்திருப்பது போல் இருந்தது. உடனே எங்களுக்கு 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். அவர்கள் இரண்டு பேரும் பொதுமக்களிடம் இருந்து பணத்தைப் பறிக்கத் தான் வந்துள்ளனர். அன்று நாங்கள் சிக்கிவிட்டோம் என்பது தெளிவாகத் தெரிந்தது. எங்களை விடுங்கள் என்று நாங்கள் அவர்களிடம் கெஞ்சினோம், ஆனால் அவர்கள் எதையும் கேட்பதாக இல்லை. நாங்கள் கெஞ்சக் கெஞ்ச அவர்கள் மேலும் மேலும் கடுமையாகப் பேசத் தொடங்கினார்கள். எங்களைக் கைது செய்து விடுவதாகவும் மிரட்டினர். எங்களுக்கு வழியில்லை என்பது புரிந்தது.

மிரட்டல்
நாங்கள் பேசப் பேச பிரச்சினை அதிகமானது. இந்தச் சம்பவம் நீண்ட நேரம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர்களின் தொல்லை எல்லை மீறிப் போனது. குற்றவாளிகளின் படங்களைக் காட்டி மிரட்டிய அவர்கள், பணம் தராவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டினர். என் மனைவி கண்ணீர் விடத் தொடங்கினார். இதனால் ஓவராக போய்விட்டோம் என்பதை உணர்ந்த அவர்கள், தங்களுக்கு எதாவது பிரச்சினை வருமோ என உணர்ந்து சற்று பின்வாங்கினார்கள். எனக்கு மட்டும் அபராதம் விதிப்பதாகச் சொன்னார்கள். டிரைவிங் சீட்டில் இருந்தவர் என்னைத் தனியாக அழைத்துச் சென்று மேலும் பிரச்சினையைத் தவிர்க்கக் குறைந்தபட்ச தொகையைச் செலுத்துமாறு அறிவுறுத்தினார். அந்த நேரத்தில் என்னால் உண்மையில் முடியவில்லை. அவர்களிடம் பேசி பேசி சோர்வாக இருந்தேன்.. என் மனைவி மிகவும் வேதனையில் இருந்தார். அதைத் தொடர நாங்கள் விரும்பவில்லை..

வேறு வழியில்லை
இதையடுத்து ரூ.1,000 அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டேன். அந்த நபர் உடனடியாக பேடிஎம் மூலம் அபராதம் செலுத்தினேன். கடுமையான எச்சரிக்கையுடன் அவர்கள் எங்களை அனுப்பினார்கள். நானும் என் மனைவியும் இன்னொரு முறை நள்ளிரவில் சாலையில் நடந்து செல்வதைக் கண்டால், கேஸ் போட்டு விடுவோம். பின் கோர்ட்டிற்கு அலைந்து கொண்டிருக்க வேண்டும் என மிரட்டினார்கள். அன்று எங்களால் தூங்கவோ முடியவில்லை. மறுநாள் வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இது எங்கள் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்திவிட்டது. போலீசார் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையைக் கெடுக்கும் வகையில் இருந்தது. பெங்களூரு போலீசாருக்கு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். இது சித்தராவதைத் தானே? சாதாரண மக்களை இப்படித்தான் நடத்துவார்களா?

யார் அந்த போலீசார்
சட்டத்தின் பாதுகாவலர்களே சட்டத்தை உடைத்து, மக்களுக்குத் தொல்லை கொடுத்தால் யாரிடம் செல்வது" என்று தனது நீண்ட ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார். இந்த தம்பதிக்கு பைன் போட்ட போலீசார் பிங்க் ஹொய்சாலா கார்இருந்துள்ளனர். சுரக்ஷா செயலி மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் புகார்களுக்கு முதலில் ரேஸ்பான்ட் செய்பவர்கள் தான் பிங்க் ஹொய்சாலா காரில் ரோந்தில் இருப்பார்கள். அவர்கள் தான் இந்தத் தம்பதியிடம் பைன் போட்டுள்ளனர். இவரது ட்வீட்டை பலரும் ரீட்வீட் செய்திருந்தனர். மேலும், பெங்களூர் போலீசாரையும் கேட் செய்திருந்தனர்.

நடவடிக்கை எடுக்க உறுதி
இதையடுத்து அவரது ட்வீட்டிற்கு பதிலளித்த பெங்களூர் நகரின் வடகிழக்கு பிரிவு காவல்துறை துணை ஆணையர் அனூப் ஏ ஷெட்டி, "இந்த விஷயத்தைக் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி.. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்மந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். மேலும், இரவு 11 மணிக்கு மேல் நகரில் நடக்கக் கூடாது என்று விதி இருக்கிறதா என ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அதுபோல எந்தவொரு விதியும் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications