Apartment கொடுமை.. அபராதம் தானே போட்டுக்கோங்க.. ரூ.15,000யை முன்பணமாக கொடுத்த பெங்களூர் நபர்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவரச காலங்களில் பொதுமக்கள் சிரமமின்றி வெளியேற வசதியாக காரிடாரில் எந்த பொருட்களையும் வைக்க கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று குடியிருப்பு நல சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒருவர் தான் வசிக்கும் வீட்டின் முன்புள்ள காரிடாரில் தனது ஷூ ரேக்கை வைத்துவிட்டு ரூ.15 ஆயிரத்தை முன்பணமாக செலுத்தி உள்ளார். அதோடு நாள்தோறும் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.15 ஆயிரத்தில் இருந்து கழித்து கொள்ளுங்கள் என கூலாக கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் மக்கள்தொகை என்பது அதிகமாக உள்ளது. இதனால் கிராமங்களை போல் தனித்தனி வீடுகள் கட்டுவதற்கு போதிய இடங்கள் இல்லை. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் அடுத்தடுத்து இருக்கும்.

இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள காரிடார்களை பொதுமக்கள் தங்களின் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது. காரிடார் என்பது மக்கள் சென்று வரும் வழியாக மட்டுமே இருக்க வேண்டம் என்று தீயணைப்பு துறை அறிவுரை வழங்கி உள்ளது. இதன்மூலம் அவசர காலங்களில் பொதுமக்கள் காரிடார் வழியாக விரைவாக வெளியேறி தப்பிக்க முடியும் என்று தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் பிரைஸ்டேஜ் சன்ரைஸ் பார்க் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள குடியிருப்பாளர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வீடுகள் முன்புள்ள காரிடார்களில் ஷூ ரேக், செடிகள், ஸ்ட்டோரேஜ் யூனிட் உள்ளிட்டவற்றை வைக்க கூடாது. மீறினால் ஒரு நாளைக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 2 மாதம் Grace Period ஆக வழங்கப்பட்டது. அதன்பிறகு நோட்டீஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் உள்ளவர்கள் காரிடாரில் இருந்த தங்களின் பொருட்களை வீட்டுக்குள் மாற்றி வைத்தனர். ஆனால் 2 வீடுகளின் முன்பு மட்டும் ஷூ ரேக் காரிடாரில் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஒரு வீட்டில் இருப்போரிடம் குடியிருப்பு நல சங்கத்தினர் பேசினர். இதனால் அவர் மனம் மாறி ஷூ ரேக்கை வீட்டுக்குள் மாற்றினார்.
ஆனால் இன்னொரு நபரோ மனம் இறங்கிவரவில்லை. என் வீட்டு முன்புள்ள காரிடாரில் நான் ஷூ ரேக்கை வைக்கிறேன். அதனை ஒருபோதும் அப்புறப்படுத்த மாட்டேன். வீட்டுக்குள்ளும் எடுத்து செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த விதியை மீறினால் அபராதம் தானே போடுவீர்கள்.. இந்தாங்க பிடிங்க ரூ.15 ஆயிரம் இருக்கு. அபராதம் போட்டு கழித்து கொள்ளுங்கள் என்று குடியிருப்பு நல சங்க நிர்வாகியிடம் கொடுத்து சென்றுள்ளார்.
இதுபற்றி அந்தகுடியிருப்பு நல சங்கத்தின் தலைவர் அருண் பிரசாத் கூறுகையில், ‛‛ஒரெயொரு வீட்டுக்காரர் மட்டும் காரிடாரில் ஷூ ரேக்கை வைத்து வருகிறார். இதற்காக முன்கூட்டியே ரூ.15 ஆயிரத்தை அபராதமாக செலுத்தி உள்ளார். அந்த பணத்தில் இருந்து தினசரி அபராத தொகை கழித்து கொள்ள கூறியிருக்கிறார். முதலில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் பாதி பேர் காரிடாரில் ஷூ ரேக், செடிகளை வைத்திருந்தனர். இப்போது இந்த நிலைமை மாறி உள்ளது'' என்றார். இதற்கிடையே தான் அந்த அபராத தொகையை ஒரு நாளைக்கு ரூ.200 ஆக மாற்றவும் திட்டமிடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications