வெள்ள நிவாரணம்.. முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து கத்துக்கோங்க! புகழும் கன்னட மக்கள்! தெறிக்கும் ட்வீட்
பெங்களூர்: கர்நாடக மாநில சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பழைய வீடியோ பதிவு ஒன்று வைரலாக பரவி வருகிறது. பெங்களூர் முழுக்க வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கும் போது தமிழ்நாட்டு முதல்வரை அந்த ஊர் மக்கள் ஏன் வைரலாக கொண்டி வருகிறார்கள் என்கிறீர்களா? அங்குதான் தரமான சம்பவம் நமக்குக் காத்திருக்கிறது.
கடந்த சில நாள்களாகப் பெங்களூருவில் பேய் மழை. எந்தப் பக்கம் திரும்பினாலும் வெள்ளம். தலைநகரமே தண்ணீரில் தத்தளிக்கும் போது வேறு ஊர்களை பற்றிச் சொல்ல வேண்டுமா? பல பகுதிகள் காட்டு வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. ஒயிட் ஃபீல்டு. அவுட்டர் ரிங் ரோடு, பழைய ஏர்போர்ட்சாலை, விமானநிலையம், மெஜஸ்டிக், சில்க்போர்டு, எலகங்கா என எந்தப் பக்கம் திரும்பினாலும் வெள்ளம்.
ஏறக்குறைய வெனீஸ் நகரை போல் மாறியுள்ளது பெங்களூர். விமானநிலையமே இப்படி என்றால், சாதாரண வீடுகள்? சொல்ல வேண்டுமா என்ன? பல கோடி மதிப்புள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இரண்டு நாள்களாகியும் வடியவில்லை. இன்னும் இரண்டு நாள்கள் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஹோட்டல்களில் வாடகை உயர்வு
பணக்காரர்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், பலர் ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கி வருகிறார்கள். அங்கும் மக்கள் குவிந்து வருவதால் பல ஹோட்டல்களில் அறைகள் இல்லை. பயங்கர கூட்டம். ஹோட்டல்களில் ஒரு இரவு தங்க மட்டும் 42 ஆயிரம் ரூபாய் வரை வசூல் கொள்ளை நடந்து வருகிறது. இந்நிலையில்தான் சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதில் சில காணொளிகளில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட ஐடி ஊழியர்கள் சிலரை ஜெசிபி எந்திரத்தின் மூலம் மீட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் கழுத்தளவு போகும் வெள்ளத்தில் உடைமைகளைச் சுமந்தபடி மக்கள் பலர் செல்வதும் பதிவாகியுள்ளது.

தோசை ரிவியூ செய்த தேஜஸ்வி சூர்யா
இந்த வீடியோக்களின் நடுவேதான் இரண்டு வீடியோக்கள் பெங்களூர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் வீடியோகடுமையாக நெட்டிசன்களால் விமர்சிக்கப்படுகிறது. இரண்டாவது வீடியோ பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது. இதில் விமர்சனத்திற்கு உள்ளான வீடியோ பாஜகவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யாவினுடையது. பாராட்டைக் குவிக்கும் வீடியோ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடையது.

வச்சு செய்யும் நெட்டிசன்கள்
மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது தேஜஸ்வி சூர்யா, ஒரு ஹோட்டலில் மசால் தோசையை சுவைத்துக் கொண்டிருக்கிறார். அதில், தான் இன்ஸ்டாவில் இந்தத் தோசை உணவகத்தைப் பார்த்ததாகவும் ஆகவே உடனே சாப்பிட்டுப் பார்க்க வந்ததாகவும் கூறுகிறார். மாநிலமே மழை வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் போது உங்களுக்கு 'ஃபுட் ரிவீவ்' செய்ய எப்படி மனம் வருகிறது. இப்போது மக்களுக்கு உதவாமல் ஏன் வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள் என அவரை வச்சு செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

ஸ்டாலினுக்கு பாராட்டு
தேஜஸ்வி சூர்யாவை ட்ரோல் செய்யும் கர்நாடக நெட்டிசன்கள் உடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வீடியோவைப் போட்டு, 'இப்படி ஒரு முதல்வர் எங்கள் மாநிலத்திற்குக் கிடைக்கவில்லையே?" என்று நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார் ஒருவர். இந்த ட்வீட்டை செய்திருப்பவர் சாதாரண நெட்டிசன் இல்லை. கர்நாடக மாநில அரசியல் விமர்சகர் ஷரவன். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்திரிகையாளர் லஷ்மி சுப்பிரமணியம் ஷேர் செய்திருந்த ஸ்டாலின் காணொளியை எடுத்துப்போட்டுத்தான் தனது கருத்தை இவர் கூறியுள்ளார். மேலும் ஷரவன் அவரது ட்விட்டில், "கடந்த ஆண்டு, கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டபோது அதனை வெற்றிகரமாகச் சமாளித்து, சென்னையில் உள்ள யாரும் பாதிக்கப்படாமல் ஸ்டாலின் பார்த்துக் கொண்டார். உடனே உணவு, தங்குமிடம் மற்றும் அடிப்படைத் தேவைகள் சரியான வகையில் கவனிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. நாங்கள் இப்படிச் சிறப்பான முதல்வர் ஸ்டாலினைத் தவறவிடுகிறோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மழை வெள்ளத்தில் ஒரு இடத்தைக் கூட விடாமல் வெள்ள சூழ்ந்த அனைத்து பகுதிக்கும் சென்று ஸ்டாலின் வேலைகளை முடுக்கிவிட்டார். இரவுகூட அவர் ஓய்வு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications