சோகத்தில் மூழ்கிய பெங்களூர்.. ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நடந்த பெரும் துயரம்! யார் பொறுப்பு?
பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதனை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கட்டுக்கடங்காத அளவில் குவிந்ததால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போதிய முன்னேற்பாடுகள் இன்றி திட்டமிட்டு செய்யாமல் நிகழ்ச்சியினை அவசர அவசரமாக நடத்தியதே இந்த சோகத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
18 ஆண்டு கால ஐபிஎல் சீசனில் முதல் முறையாக நடப்பு ஆண்டு பெங்களூர் அணி கோப்பையை வென்று அசத்தியது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியதில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. நேற்றே இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

நேற்று இரவு முழுக்க பட்டாசு வெடித்து ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடினர். இந்த நிலையில் இன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கர்நாடக அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இன்று மாலை 5 மணியளவில் ஸ்டேடியத்தின் உள்ளே இந்த பாராட்டு விழா நடந்தது.
இதற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருந்ததால் ஏராளமான ரசிகர்கள் ஸ்டேடியம் அருகே குவிந்தனர். அரசு நினைத்ததை விட ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ரசிகர்கள் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்டேடியத்தின் உள்ளே நடந்த வெற்றி விழாவில் பங்கேற்று இருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, உடனே நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் சின்னசாமி ஸ்டேடியம் உள்ளது. ஆனால் இன்று உள்ளே 35 ஆயிரம் பேரும் வெளியே 30 ஆயிரம் பேரும் குவிந்ததால் இந்த கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளர். பெங்களூர் மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கான காரணங்கள் என்ன என்பது தெரியவந்துள்ளது.
* காலையில் முடிவு செய்து அவசர அவசரமாக இந்த வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்ததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
* பெங்களூர் நகரம் பெரும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம் என்பதால், அதற்கு ஏற்ப அரசு திட்டமிட்டு வெற்றி விழாவை நடத்தவில்லை என கூறப்படுகிறது
* பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ஆம்புலன்ஸ், மருத்துவ உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
* வெறும் 30 ஆயிரம் பேர் மட்டுமே வரும் அளவுக்கு இட வசதி உள்ள இடத்தில் 1 லட்சம் பேர் திரண்டு இருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
* போதிய முன்னேற்பாடுகள் இன்றி திட்டமிட்டு செய்யாமல் நிகழ்ச்சியினை அவசர அவசரமாக நடத்தியதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
* சாதாரண ஐபிஎல் போட்டி வெற்றியை முறையாக திட்டமிடாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் சித்தரமையா அரசு மேற்கொண்டுள்ளது. முறையான திட்டமிடல், முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications