தாடியை ஷேவ் பண்ண மாட்டியா.. பெங்களூரில் மாணவரைத் தாக்கிய சீனியர்கள்.. 3 பேர் மீது வழக்கு
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஜூனியர் மாணவர் ஒருவர் தாடியை ஷேவ் செய்யாததால் சீனியர் மாணவர்கள் இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து மூன்று மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி என்றாலே ராகிங் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த ராகிங் பழக்கம் ஒரு கட்டத்தில் தனிநபர் தாக்குதலாகவும், துன்புறுத்தும் செயலாகவும் மாறியதையடுத்து இதனைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு கல்லூரியிலும் ராகிங் கமிட்டி அமைக்கப்பட்டது. என்னதான் கல்லூரியில் ராகிங் கமிட்டி செயல்பட்டு வந்தாலும் ஒருசில நேரங்களில் மாணவர்கள் தாக்குதலுக்குள்ளாகும் சம்பவங்களும தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், பெங்களூர் தனியார் கல்லூரியில் படித்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவரை தாடியை ஷேவ் செய்யாததற்காக சீனியர் மாணவர்கள் கும்பல் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் அருகே உள்ள பெல்லந்தூர் பகுதியில் அமைந்துள்ளது கிருபாநிதி குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன். இந்த கல்லூரியில் சேவியர், விஷ்ணு, சரத் ஆகிய மூன்று மாணவர்கள் இரண்டாம் ஆண்டு பிபிஏ படித்து வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இக்கல்லூரிக்குள் ஏப்ரல் மாதத்தில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த மாணவர்கள் கேரள மாணவரை அழைத்து அவரது தாடியை ஷேவ் செய்ய வேண்டும் என்று கூறி ராகிங் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் சொல்வதை கேரள மாணவர் கண்டுகொள்ளாமல் ஷேவ் செய்யாமல் விட்டுள்ளார். இதனால், கோபமடைந்த சீனியர் மாணவர்கள் அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அவரைக் குறிவைத்து பல்வேறு பிரச்னைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த சீனியர் கும்பல் அவரைத் தேடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஒருநாள் கேரள மாணவரை சீனியர் ஒருவர் தேவாலயத்துக்கு அழைத்த நிலையில், அவரும் தனது நண்பருடன் அங்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சீனியர் கும்பல் மாணவர்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், இரண்டு மாணவர்களும் பலத்த காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவர் கூறுகையில், எனது சீனியர் ஒருவர் என்னைச் சந்திக்க வேண்டும் என்று கூறி அருகில் உள்ள தேவாலயத்திற்கு என்னை அழைத்தார். நான் என் அறை நண்பருடன் தேவாலயத்திற்கு சென்றேன். அப்போகு, அங்கு கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்டோர் இருந்தனர். திடீரென அவர்கள் என்னைத் தாக்க தொடங்கினர். கிளீன் ஷேவ் செய்ய வேண்டும் எனக் கூறி என்னைக் கட்டாயப்படுத்தினர். இதுமட்டுமல்லாமல் பல விஷயங்களுக்காக என்னைத் தாக்கினர். இச்சம்பவத்தால் நான் கடுமையாக காயமடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா 118 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications