1 கிமீ கடக்க 2 மணிநேரம்! விவாதமான பெங்களூர் டிராபிக்.. பலிகடாவாகும் ஐபிஎஸ் அதிகாரி? தூக்கியடிப்பு
பெங்களூர்: பெங்களூரில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபியாக இருந்த அலோக் குமார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் நேற்று முன்தினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஒரு கிலோமீட்டரை கடக்க 2 மணிநேரம் வரை ஆன நிலையில் இன்றைய தினம் அவர் அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா-தமிழ்நாடு இடையேயான காவிரி நீர் பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 26ம் தேதி பெங்களூரில் பந்த் நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று கர்நாடகா பந்த் நடந்தது.

இந்நிலையில் தான் நேற்றைய மிலாது நபி, இன்றைய கர்நாடகா பந்த், நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி என 5 நாள் விடுமுறையையொட்டி பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் ஏராளமானவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் கார்களில் பயணம் செய்ததால் நேற்று முன்தினம் மாலையில் பெங்களூரில் உள்ள பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமான வார இறுதி நாட்களை காட்டிலும் வாகனங்களின் எண்ணிக்கை என்பது அதிகமாக இருந்தது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. குறிப்பாக அவுட்டர் ரிங் ரோடு, ஓசூர் ரோடுகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன.
ஒரு கிலோ மீட்டர் தொலைவை கடக்க சுமார் 2 மணிநேரம் வரை ஆனது. இதனால் பள்ளி, கல்லூரி முடித்து வீடு திரும்பிய மாணவர்கள், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியோர் என அனைவரும் இரவில் தான் தங்களின் வீடுகளுக்கு சென்றனர். இந்த கடும் போக்குவரத்து நெரிசல் என்பது இந்திய அளவில் பெரும் பேசும்பொருளானது. அதோடு பெங்களூரின் பெயருக்கும் கெட்டப்பெயர் ஏற்பட்டது.
பெங்களூர் என்பது இந்தியாவின் முக்கிய நகரமாக உள்ளது. ஐடி உள்பட பல தொழில் நிறுவனங்கள் நிரம்பி உள்ளன. இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் பெங்களூர் நகர் தனது புகழை இழக்கும் என பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் தான் பெங்களூரில் போக்குவரத்து மற்றம் சாலை பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபியாக இருந்த அலோக் குமார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது பெங்களூரில் பயிற்சி பிரிவின் ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய பொறுப்பில் அவர் அக்டோபர் 1ம் தேதி முதல் செயல்படுவார் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் பெங்களூர் நகரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக அலோக் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கர்நாடகாவை பொறுத்தவரை அலோக் குமார் ஐபிஎஸ் என்பவர் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் பல முக்கிய குற்ற வழக்குகளை திறம்பட விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளார். மேலும் அதிரடி நடவடிக்கைக்கும் இவர் பெயர் பெற்றவர். இதற்கு முன்பு பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் இருந்தார். இத்தகைய சூழலில் தான் தற்போது அவர் பெங்களூரில் போக்குவரத்து மற்றம் சாலை பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபி பொறுப்பில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications