பெங்களூரு வன்முறை....கழிப்பறையில் 5 பேர்...3 மணி நேரம்...கலக்கத்தில் குடும்பம்!!
பெங்களூரு: பெங்களூருவில் காவல்பைரசந்த்ரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த வன்முறையின்போது தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள 4 மற்றும் 6 வயது குழந்தைகள் உள்பட 5 பேர் மூன்று மணி நேரம் வீட்டின் கழிப்பறையில் அடைந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பெங்களூருவில் காவல்பைரசந்த்ரா பகுதியில் நாகம்மா லே அவுட்டில் இருக்கும் 7 வது கிராஸில் ஏசி மெக்கானிக் ராபின் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி ஷர்மிளா. ஃபேஸ்புக்கில் குறிப்பிட்ட ஒரு மதத்தை விமர்சனம் செய்திருந்த நவீனின் சகோதரர் ஹர்ஷா வீட்டின் முதல் மாடியில் ராபின் குடியிருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 7.30 மணிக்கு நவீன் வீட்டை 100க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியுள்ளனர். இதை கண்களால் ராபின் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து ராபின் கூறுகையில், ''எங்களது கட்டிடத்தின் மேல் மாடியில் எம்.எல்.ஏ.வின் உறவினர் குடியிருந்து வருகிறார். அவரது வீட்டை நோக்கி ஒரு கும்பல் ஓடி வந்தது. இதையடுத்து நாங்கள் எங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள எங்களது வீட்டில் இருக்கும் சிறிய கழிப்பறையில் நான், எனது மனைவி, இரண்டு குழந்தைகள், எனது தாய் அனைவரும் புகுந்து ஒளிந்து கொண்டோம். சுமார் மூன்று மணி நேரம் அந்தக் கழிப்பறையில் மறைந்து இருந்தோம்'' என்கிறார்.
இந்தக் கட்டிடம் அடித்து நொறுக்கப்படுவது, ஷர்மிளாவின் ஸ்கூட்டரை இழுத்துப் போட்டு தீ வைத்தது, ராபினின் காருக்கு தீ வைத்தது என்று அனைத்தையும் எதிரே குடியிருக்கும் ராபினின் அத்தை ஜன்னல் வழியாக கவனித்துக் கொண்டு இருந்துள்ளார்.
இதுகுறித்து மலர்மதி கூறுகையில், ''நான் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து நாங்கள் அனைவரும் ஏழைகள், ஸ்கூட்டருக்கு நெருப்பு வைக்க வேண்டாம். வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம் என்று கதறினேன். கை எடுத்து கும்பிட்டேன். ஆனால், அவர்கள் என்னையும் சேர்த்து தீ வைத்து விடுவேன் என்று மிரட்டினர்'' என்கிறார்.
இந்த சம்பவத்தின்போது, ராபின் வீட்டுக்குள்ளும் அந்த வன்முறைக் கும்பல் வந்துள்ளது. ஃபிரிட்ஜ், பர்னிச்சர்களை அடித்து நொறுக்கியுள்ளனர். பூஜை அறையையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் சென்ற பின்னர் ராபினின் அத்தை மலர்மதி வீட்டுக்குள் ஓடி வந்துள்ளார். அப்போது, பயத்தில் கழிப்பறைக்குள் இருந்த ராபினின் மூத்த மகன் வாந்தி எடுத்து ஏறக்குறைய மயக்கத்தில் இருந்துள்ளார். இந்த சம்பவம் அவர்களுக்கு அதிர்ச்சியை மட்டுமில்லை, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவிற்கு கலக்கத்தை விட்டுச் சென்றுள்ளது என்கிறார் ஷர்மிளா.
இவர்களுக்கு இந்தக் கொடூரம் என்றால், இவர்களது வீட்டுக்கு அருகே இருப்பவர்கள் தங்களது தங்க நகைகள், பணத்தை இழந்துள்ளனர். வன்முறை கும்பல் இவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications