"கழுத்தில் மார்க்.." குப்பை லாரியில் பெண் சடலம்! லிவ் இன் பார்ட்னர் வெறிச்செயல்.. அதிர்ந்த பெங்களூர்
பெங்களூர்: வழக்கமாக பரபரப்புடன் இயங்கும் பெங்களூரு மாநகரம், நேற்று ஒரு கொடூரச் சம்பவத்தால் உறைந்துபோனது. குப்பை லாரி ஒன்றில் சாக்கு மூட்டைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம், அப்பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், பெண்ணின் லிவ்-இன் பார்ட்னரே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், அதையும் தாண்டி சில மோசமான சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் பெங்களூரில் நடந்துள்ளது.

குப்பை லாரியில் சடலம்
நேற்று ஞாயிற்றுக்கிழமை, பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் வழக்கம்போல் குப்பைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு குப்பை லாரியில் இருந்த சாக்கு மூட்டையிலிருந்து லேசான துர்நாற்றம் வீசவே, சந்தேகமடைந்த ஊழியர்கள் அதைத் திறந்து பார்த்தனர். உள்ளே, கைகள் கட்டப்பட்ட நிலையில், கழுத்தில் இறுக்கியதற்கான அடையாளங்களுடன் ஒரு பெண்ணின் உடல் இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர். உடனடியாக இத்தகவல் பெங்களூரு போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். மேலும், உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் முதற்கட்டமாகச் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை ஆரம்பித்தனர். அதில் 33 வயதான முகமது ஷம்சுதீன் என்பவரைக் கைது செய்தனர்.
லிவ் இன் பார்ட்னர்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷம்சுதீனும், கொலை செய்யப்பட்ட ஆஷாவும் கடந்த ஒன்றரை வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் வந்துள்ளனர். அவர்கள் தெற்கு பெங்களூரில் உள்ள ஹூலிமாவு பகுதியில் வாடகை வீட்டில் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். அதுமட்டுமின்றி இருவருக்கும் தலா இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், அதைத் தாண்டி அவர்கள் பெங்களூரில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். வெளியே யார் கேட்டாலும் தங்களைக் கணவன் மனைவி என்று சொல்லியுள்ளனர்.
ஆஷாவின் கணவர் இறந்துவிட்ட நிலையில், அவர் ஷம்சுதீன் உடன் இருக்க ஆரம்பித்துள்ளார். பிரபல சர்வீஸ் கம்பெனி ஒன்றில் அவர் வீட்டு வேலைகளைச் செய்து வருகிறார். முகமது ஷம்சுதீனும் திருமணம் ஆனவர். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அசாமில் வசித்து வருவது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
போலீஸ் சொல்வது என்ன
இது குறித்து தெற்குப் பிரிவு காவல் துணை ஆணையர் லோகேஷ் பி. ஜகலசார் கூறுகையில், "ஆஷாவுக்கும் ஷம்சுதீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆஷாவை ஷம்சுதீன் தாக்கியுள்ளான். ஷம்சுதீன் ஆஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். கொலை செய்த பிறகு, ஷம்சுதீன் உடலை பைக்கில் எடுத்துச் சென்று குப்பை லாரியில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது" என்றார்.
அந்த நபர் சாக்கு பையை குப்பை லாரியில் வீசுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதன் மூலமாகவே போலீசார் குற்றவாளியை விரைந்து கைது செய்ய முடிந்தது. பெங்களூரில் அரங்கேறிய இந்தக் கொடூரமான கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்தக் கொலை குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications