இலவச திட்டங்களுக்கு பணம் வேண்டுமே.. மக்கள் வயிற்றிலேயே அடிக்கும் கர்நாடக அரசு.. குப்பைக்கு வரியாம்
பெங்களூர்: பெங்களூரில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு மாத கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் வீடுகளில் குப்பையை சேகரிக்க மாதம் குறைந்தபட்சம் ரூ.30 முதல் அதிகபட்சமாக ரூ.500 வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
பெங்களூர் நகரில் ஆண்டுதோறும் மக்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது பெங்களூர் நகரின் மக்கள் தொகை என்பது ஒரு கோடியை கடந்துள்ளது. மேலும் நகரில் எங்கு பார்த்தாலும் கட்டடங்கள் தான் இருக்கின்றன.

மக்கள் தொகை அதிகரிப்பால் பெங்களூர் நகரில் சேரும் குப்பைகளின் அளவு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றி வருகிறது. மேலும் குப்பைகளை மக்கும் வகையிலும், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது பெங்களூர் மாநகராட்சியை பொறுத்தமட்டில் 198 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பல லட்சம் வீடுகளும், வணிக கட்டடங்களும் உள்ளன. தற்போது இவர்கள் அனைவரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வழங்கினால் போதும். தூய்மை பணியாளர்கள் அதனை பெற்று அப்புறப்படுத்துவார்கள்.
இத்தகைய சூழலில் தான் தற்போது பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை செய்துள்ளது. அதாவது பெங்களூர் நகரில் குப்பைகளை சேகரிக்க வீடு மற்றும் வணிக கட்டடங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. இந்த கட்டணம் என்பது அந்தந்த வீடுகளில் பயன்படுத்தப்படும் மாதாந்திர மின்சார கட்டணத்தை பொறுத்து நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 6 பிரிவுகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி மாதம் ரூ.200 மின்கட்டணமாக செலுத்துவோரிடம் இருந்து குப்பை கட்டணமாக ரூ.30, ரூ.200 முதல் ரூ.500 மின்கட்டணம் செலுத்துவோரிடம் இருந்து ரூ.60, ரூ.501 முதல் ரூ.1,000 மின்கட்டணம் செலுத்துவோரிடம் இருந்து ரூ.100, ரூ.1,001 முதல் ரூ.2000 மின்கட்டணம் செலுத்துவோரிடம் இருந்து ரூ.200, ரூ.2001 முதல் ரூ.3000 மின்கட்டணம் செலுத்துவோரிடம் இருந்து ரூ.350, ரூ.3,001 முதல் அதற்கு அதிகமாக மின்கட்டணம் செலுத்துவோரிடம் இருந்து ரூ.500 குப்பை கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
இந்த கணக்கீட்டின் படி பார்த்தால் பெங்களூரில் மொத்தம் 46.17 லட்சம் வீடுகளில் இருந்து குப்பைக்கான கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதவிர 6.32 லட்சத்திற்கும் அதிகமான வணிக நிறுவனங்களும் குப்பைக்கான கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். வணிக நிறுவனங்கள் என்றால் குறைந்தபட்ச கட்டணம் ரூ.75 ஆகவும், அதிகபட்ச குப்பை கட்டணம் ரூ.1000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாதம் பெங்களூர் மாநகராட்சிக்கு ரூ.72.39 கோடி வருவாய் கிடைக்கும்.
இந்த திட்டம் குறித்து பெங்களூர் மாநகராட்சி மற்றும் பெஸ்காம் மின்வாரியம் சார்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு இந்த திட்டம் குறித்து வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக இதுபற்றி கர்நாடகா துணை முதல்வரும், பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சருமான டிகே சிவக்குமாருடன் விவாதிக்கப்பட உள்ளது. அவர் ஓகே சொல்லும்பட்சத்தில் மாநில அரசு ஒப்புதல் அளிக்கும். இதையடுத்து பெங்களூர் நகரில் குப்பைகளை வழங்க பொதுமக்கள் மாதம் குறைந்தபட்ச கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
இதுபற்றி பெங்களூர் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛இதுவரை செஸ் என்பது சொத்து வரியின் ஒரு பகுதியாக மிகவும் குறைந்து இருந்தது. திடக்கழிவு மேலாண்மை தொடர்பான நடவடிக்கைக்கு ஏற்படும் செலவு என்பது 10 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் நிதிச்சுமை ஏற்படுகிறது. அதோடு தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போதைய இந்த முடிவு என்பது பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்'' என்றார்.
கர்நாடகாவில் பெண்களுக்கு இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மாதம் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது. இதுபோல பல இலவசங்களை காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு நிதி ஆதாரம் இல்லாமல் திணறும் அரசு, அந்த பணத்தை மக்களிடமிருந்தே எடுக்கிறது. மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, தண்ணீர் கட்டண உயர்வு என ஏற்கனவே பல வழிகளில் மக்களின் பாக்கெட்டில் இருந்து அரசு பணத்தை எடுத்துவருகிறது. மத்திய அரசு கெடுபிடிகளால் தங்களுக்கு வேறு வழியில்லை என்பது கர்நாடக அரசின் வாதமாக உள்ளது.












Click it and Unblock the Notifications