4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ- ஒப்புதல் வாக்குமூலம் பெற முடியாமல் போலீஸ் திணறல்- சொல்வது இதுமட்டுமாம்!
பெங்களூர்: 4 வயது மகனை கொலை செய்த பெங்களூர் பெண் சிஇஓ சுசானா சேத் (சுசனா சேத்) இதுவரை போலீசில் தாம் கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளவே இல்லையாம்; சுசானா சேத் ஒப்புதல் வாக்குமூலம் தராததால் கர்நாடகா போலீசார் ரொம்பவே திணறி வருவதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுசானா சேத் செயற்கை நுண்ணறிவு துறையில் உலகின் முன்னணி வல்லுநர். செயற்கை நுண்ணறிவு துறையில் உலகின் டாப் 100 வல்லுநர்களில் சுசானா சேத்தும் ஒருவர். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயற்கை நுண்ணறிவு துறை சார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது கணவர் வெங்கட்ராமன். இவர் ஆஸ்திரேலியா அல்லது இந்தோனேசியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.

சுசானா சேத்- வெங்கட்ராமனுக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2019-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சின்மய் என பெயரிடப்பட்டது. ஆனால் சுசானா சேத்- வெங்கட்ராமன் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவகாரத்துக்காக நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இதில், மகனை ஞாயிறுதோறும் வெங்கட்ராமன் சந்திக்க நீதிமன்றம் அனுமதி தந்தது. ஆனால் சுசானா சேத் இதனை விரும்பவில்லையாம்.
இந்நிலையில் 4 வயது மகனுடன் கோவா சென்ற சுசானா சேத் அங்கு மகனுக்கு இருமல் மருந்தை அதிக அளவு கொடுத்து மயக்கமடைய செய்திருக்கிறார். பின்னர் தலையணையால் அல்லது துணியால் அமுக்கி 4 வயது மகனை ஈவிரக்கமே இல்லாமல் கொலை செய்துள்ளார். அத்துடன் மகனின் உடலை சூட்கேசில் அடைத்து கர்நாடகாவுக்கு திரும்பும் வழியில் போலீசில் வசமாக சிக்கிக் கொண்டார் சுசானா சேத்.
தற்போது கர்நாடகா போலீஸ் கஸ்டடியில் இருக்கும் சுசானா சேத், இதுவரையில் மகனை கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளவே இல்லையாம். தமக்கும் கணவருக்குமான பிரச்சனை என்ன? என்பதையும் கூட தெரிவிக்காமல் இறுக்காமாகவே இருக்கிறாராம். அத்துடன் என் மகன் இறந்து கிடந்தான். அவன் எப்படி இறந்தான் என்பது எனக்கு தெரியாது என்பதையே திரும்ப திரும்ப, எப்போது போலீசார் கேட்டாலும் சொல்கிறாராம் சுசானா சேத். இதனால் அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற முடியாமல் போலீசார் திணறுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications