பாட்டியை கொன்று 4 மாதங்களாக வீட்டில் வைத்திருந்த வாலிபர்.. அம்மாவும் உடந்தை.. உறைந்துபோன பெங்களூர்!
பெங்களூர்: தனது பாட்டியை கொலை செய்து அவரது உடலை வீட்டு அலமாரியில் வைத்த கொடூரப் பேரனை பெங்களூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த அந்த இளைஞரின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சொந்த பாட்டியையே கொலை செய்தது குறித்து பேரன் அளித்த வாக்குமூலம் போலீஸாரையே திடுக்கிட வைத்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை போலீஸார் கண்டுபிடித்தது எப்படி; கொலையாளிகளை எவ்வாறு கைது செய்தனர் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

இரவோடு இரவாக காலியான வீடு
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள கெங்கேரி சாட்டிலைட் டவுண் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சஞ்சய் வாசுதேவ் ராவ் (27). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடன் இவரது தாயார் ராதா (50) மற்றும் சாந்தகுமாரி (70) (தந்தையின் தாய்) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த சூழலில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி இரவு, யாருக்கும் சொல்லாமல் அவர்கள் வீட்டை விட்டுச் சென்றனர். பின்னர் அடுத்த நாள் காலையில் வீட்டு உரிமையாளர் நவீனை செல்போனில் தொடர்புகொண்ட வாசுதேவ், ஒரு அவசர காரியத்துக்காக சொந்த ஊர் வந்துள்ளதாகவும், ஒருசில வாரங்களில் வீடு திரும்புவதாகவும் கூறியுள்ளார்.

வீட்டில் இருந்து துர்நாற்றம்
வாசுதேவ் குடும்பத்தினர் வீட்டை காலி செய்து ஒரு மாதமாகியும் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததால் அவருக்கு நவீன் போன் செய்துள்ளார். ஆனால் வாசுதேவின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது தாயார் ராதாவுக்கு போன் செய்த போது, அவரது செல்போனை தொடர்புகொள்ள முடியவில்லை. இதற்கு அடுத்த சில நாட்களில் வாசுதேவின் வீட்டில் இருந்து லேசாக துர்நாற்றம் வீசியுள்ளது. சரி, எலி ஏதாவது செத்து போயிருக்கும் என அக்கம்பக்கத்தினர் கருதினர். ஆனால் நாளுக்கு நாள் இந்த துர்நாற்றம் அதிகரிக்க தொடங்கியது.

சிமெண்ட் பூசப்பட்ட அலமாரி..
ஒருகட்டத்தில், வாசுதேவ் வீடு அமைந்திருக்கும் தரைத்தளத்துக்கே யாரும் போக முடியாதபடி கடும் துர்நாற்றம் வீசியது. பின்னர் இதுகுறித்து வீட்டு உரிமையாளர் நவீனுக்கு அக்கம்பக்கத்தினர் போன் செய்து கூறினர். இதையடுத்து, இதுதொடர்பாக அவர் போலீஸுக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார், வாசுதேவ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு அறையில் இருந்து தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியுள்ளது. அப்போது அங்கிருந்த அலமாரியின் கதவுகள் மீது சிமெண்ட் பூசப்பட்டிருந்தது.

அலமாரியில் அமர்ந்திருந்த மூதாட்டி உடல்
இதையடுத்து, அந்த சிமெண்டை உடைத்து அலமாரியை போலீஸார் திறந்து பார்த்த போது, அங்கு அழுகிய நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலம் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், அந்த உடலை பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். அப்போது தலையில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, வாசுதேவையும், அவரது தாயார் ராதாவையும் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

தேடுதல் வேட்டை
ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள் என போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் வாசுதேவின் நண்பரான நந்தீஷ் என்பவரிடம் விசாரித்த போது, ஒரு முறை மகாராஷ்டிராவில் இருந்து அவர் போன் செய்ததாக கூறினார். இதையடுத்து, மகாராஷ்டிராவில் பல இடங்களில் போலீஸார் தேடி அலைந்தனர். மகாராஷ்டிரா போலீஸாரும் பெங்களூரு போலீஸுக்கு உதவியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

மகாராஷ்டிராவில் கைது
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மகாராஷ்ட்ராவின் கோஹல்பூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் வாசுதேவை போல ஒருவர் இருப்பதாக மகாராஷ்டிரா உளவு போலீஸார், பெங்களூரு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் அங்கு சென்ற போலீஸார், வாசுதேவை கைது செய்தனர். பின்னர் அவருடன் அவர் வீட்டுக்கு சென்று அவரது தாயார் ராதாவையும் கைது செய்தனர்.

பகீர் வாக்குமூலம்
அப்போது பாட்டியை கொலை செய்தது தொடர்பாக வாசுதேவ் கூறியாவது: எனது பாட்டி சாந்தகுமாரி மிகவும் கண்டிப்பானவர். நான் பெரியவன் ஆன பிறகும், இரவு தாமதமாக வரக் கூடாது; நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வரக்கூடாது எனக் கூறி வந்தார். மேலும், ஹோட்டலில் இருந்து உணவு வாங்கக்கூடாது என்றும், தினமும் என் அம்மா தான் வீட்டில் சமைக்க வேண்டும் என வற்புறுத்துவார். அதுமட்டுமல்லாமல், ஒரு நாளைக்கு 6 வேளை குளிப்பார். அவரது இந்த செயல்கள் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தின. இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி ஹோட்டலில் இருந்து உணவு வாங்கி வந்தேன். இதனால் என்னை அவர் கடுமையாக திட்டினார். இதனால் கோபத்தில் வீட்டில் இருந்த இரும்பை எடுத்து அவரது தலையில் அடித்தேன். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனால் பயந்துபோன நானும், அம்மாவும் அவரது உடலை வீட்டு அலமாரியில் வைத்து அதன் மேல் சிமெண்ட்டால் பூசினோம். பாட்டியின் உடலுடனே 4 மாதங்கள் வீட்டில் இருந்தோம். ஆனால் அதற்கு மேல் உடலில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் வீட்டை காலி செய்தோம். இவ்வாறு வாசுதேவ் கூறினார்.












Click it and Unblock the Notifications