பெங்களூருவில் இன்று முதல் ஜூலை 22 வரை மீண்டும் லாக்டவுன் அமல்-சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்
பெங்களூரு: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெங்களூருவில் இன்று முதல் ஜூலை 22-ந் தேதி வரை மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. இதனால் பெங்களூருவாசிகள் ஆயிரக்கணக்கானோர் இன்று சொந்த ஊர்களுக்கு பெரும் எண்ணிக்கையில் திரும்பிச் சென்றனர்.
கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் கர்நாடகா 5வது இடத்தில் உள்ளது. கர்நாடகாவில் 41,581 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 759 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் பெங்களூருவில்தான் மிக மோசமான பாதிப்பு உள்ளது. பெங்களூருவில் 15,051 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
ஆனாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதனையடுத்து ஜூலை 14-ந் தேதி முதல் ஜூலை 21-ந் தேதி வரை மீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார். ஜூலை இரவு 8 மணி முதல் ஜூலை 22-ந் தேதி அதிகாலை 5 மணிவரை இந்த லாக்டவுன் அமலில் இருக்கும். தட்சிண கன்னடா, தார்வாட் பகுதிகளில் ஜூலை 15 முதல் லாக்டவுன் அமலுக்கு வரும்.
அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கான கடைகள் காலை 5 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். இந்த லாக்டவுன் அமல்படுத்தப்படுவதால் பெரும் எண்ணிக்கையிலான பெங்களூருவாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு இன்று திரும்பினர். இதனால் பெங்களூரு நகரில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

இந்த லாக்டவுன் காலத்தில் ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், நீச்சல்குளங்கள், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், மதவழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அரசியல் கூட்டங்கள், பேரணிகள், மெட்ரோ ரயில் சேவைகளும் மூடப்பட்டிருக்கும். மருத்துவமனைகள், காய்கறி, இறைச்சி கடைகள் திறந்திருக்கும். காரணமே இல்லாமல் வெளியில் நகர்வலம் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications