உலக தரத்திற்கு மாறும் பெங்களூர்! உட்கட்டமைப்பு வசதிகளில் பெரிய சேஞ்ச்! வெளியான முக்கிய அறிவிப்பு!
பெங்களூர்: என்னதான் பெங்களூர் ஐடி துறையில், சர்வதேச தரத்திற்கு உயர்ந்திருந்தாலும், உள்கட்டமைப்பு வசதியில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனவே, இந்த நகரத்தை சர்வதேச தரத்தில் மாற்ற பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டிருக்கிறார்.
பட்ஜெட்டில், பெங்களூருவை உலகின் மிகவும் வசிக்கத்தக்க நகரமாக மாற்றுவதற்கான திட்டங்களை சித்தராமையா அறிவித்திருக்கிறார். சர்வதேச தரத்திற்கு நகரை மாற்ற வேண்டும் எனில், நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக, சாலைகளின் தரத்தை மேம்படுத்த 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுகின்றன என்று சித்தராமையா தனது பட்ஜெட் உரையில் பேசியிருக்கிறார்.

பெங்களூரு உள்கட்டமைப்பு மேம்பாடு
சுமார் 158 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் தளமாக மாற்றப்படும் என்று கூறிய சித்தராமையா, இது மழைக்காலங்களில் சாலைகள் பழுதடைவதைத் தவிர்க்கும் என விளக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பெங்களூர் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை மோசமான சாலைகள்தான். அதுவும் மழைக்காலத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறுவதால் அரசு மீது ஐடி ஊழியர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு தீர்வு காணும் என்று சொல்லப்படுகிறது.
மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சில்க் போர்டு சந்திப்பு முதல் கே.ஆர். புரம் மெட்ரோ நிலையம் வரையிலான வெளிவட்டச் சாலை, 450 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்திற்கு உயர்த்தப்பட உள்ளது.
மழைக்கால வெள்ளப் பாதிப்புகளை கட்டுப்படுத்த, மழைநீர் வடிகால்களைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர்கள் மூலம் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இது நகரின் நீர்நிலைகளை பாதுகாக்க உதவும்.
மாணவர் நலன் திட்டங்கள்
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, 'வித்யார்த்தி இந்திரா உணவகங்கள்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று சித்தராமையா அறிவித்துள்ளார். உயர்கல்வி பயிலும் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இவை தொடங்கப்படும். முதற்கட்டமாக, தார்வாடில் 4 உணவகங்களும், பெங்களூருவில் 2 உணவகங்களும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் மாணவர்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும். இதன் மூலம் மாணவர்கள் ஆரோக்கியமான உணவை எளிதில் பெற முடியும்.












Click it and Unblock the Notifications