அம்பேத்கரை இழிவுபடுத்தி நாடகம் போட்ட ஜெயின் பல்கலைக்கழக மாணவர்கள்.. கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
முதலில், சாதாரணமாக சென்ற அந்த நாடகம் சில நிமிடங்களுக்கு பிறகு ஜாதி வெறியை மையப்படுத்தியதாக மாறத் தொடங்கியது. மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும், சட்டமேதை டாக்டர் அம்பேத்கரையும், இடஒதுக்கீட்டையும் இழிவுப்படுத்தும் வசன
பெங்களூர்: சட்டமேதை அம்பேத்கரையும், தலித் சமூகத்தினரையும் இழிவுபடுத்தும் விதமாக பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகம் நாடகம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாடகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பார்வையாளர்கள், ஜெயின் பல்கலைக்கழகம் மற்றும் நாடகக் குழுவினருக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.
மேலும், அந்த பல்கலைக்கழகம் மீது பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, இந்த நாடகத்தை அரங்கேற்றிய 6 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயின் பல்கலைக்கழகம்
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஜெயின் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் முதல் Youth Festival என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி அப்பல்கலைக்கழகத்தில் மேலாண்மை படிப்பு (Management studies) துறையைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில் நகைச்சுவை நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்பேத்கரை இழிவுப்படுத்தி..
முதலில், சாதாரணமாக சென்ற அந்த நாடகம் சில நிமிடங்களுக்கு பிறகு ஜாதி வெறியை மையப்படுத்தியதாக மாறத் தொடங்கியது. மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும், சட்டமேதை டாக்டர் அம்பேத்கரையும், இடஒதுக்கீட்டையும் இழிவுபடுத்தும் வசனங்கள் அதில் இடம்பெற்றன. குறிப்பாக, பி.ஆர்.அம்பேத்கர் பெயரை 'பீர்' அம்பேத்கர் என்று உச்சரித்தும் வசனங்கள் பேசப்பட்டன.

கடும் எதிர்ப்பு
இதனால் நாடகம் நடைபெற்று கொண்டிருந்தபோதே, பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மாணவர்களும், பொதுமக்களும் அந்த நாடகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். பிறகு நாடகம் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. இதையடுத்து, பார்வையாளர்களே ஒன்று திரண்டு இந்த நாடகத்துக்கு எதிராகவும், நாடகத்தை அரங்கேற்ற அனுமதியளித்த ஜெயின் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

நிபந்தனையற்ற மன்னிப்பு
இது ஒருபுறம் இருக்க, இந்த நாடகக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கண்டனத்துக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி வருகிறது. மேலும், இதுதொடர்பாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. விஷயம் பூதாகரமாவதை உணர்ந்த ஜெயின் பல்கலைக்கழகம் பொதுமக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், நாடகம் போட்ட 6 மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் இன்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications