மாஸ்டர்மைண்ட் "பாய் பெஸ்டி".. காதலனை தீர்த்துக்கட்டிய காதலி.. சென்னை மருத்துவர் கொலையில் திருப்பம்
பெங்களூர்: சென்னையை சேர்ந்த சேர்ந்த மருத்துவர் அண்மையில் பெங்களூரில் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தனது காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதால், காதலியின் ஆண் நண்பர்கள் அவரை அடித்துக் கொலை செய்ததாக இந்த வழக்கில் முதலில் கூறப்பட்டது.
ஆனால், தற்போது இதில் எதுவுமே உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. தனது பெஸ்ட்டியுடன் உல்லாசமாக இருக்க தடைப் போட்டதால் அப்பாவியான சென்னை மருத்துவரை அவரது காதலியே கொலை செய்திருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை மருத்துவர்
சென்னையைச் சேர்ந்தவர் விகாஷ் ராஜன் (27). உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு திரும்பிய அவர், சென்னையில் இரண்டு ஆண்டுகளாக பகுதிநேர மருத்துவராக பணிபுரிந்து வந்தார். பின்னர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெங்களூரு சென்ற அவர், இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்தும் தேர்வுக்கு தயாராகி வந்தார். உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள், இந்தியாவில் முழுநேர மருத்துவராக பணியாற்ற வேண்டுமானால், இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

'லிவ் இன்' ரிலேஷன்ஷிப்
இதற்காக பெங்களூரில் பிடிஎம் லேஅவுட் பகுதியில் அவர் வீடு எடுத்து தங்கியிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான பூஜாவுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விகாஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழும் 'லிவ் இன்' உறவில் இருந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

நிர்வாணப் புகைப்படம் - அடித்துக் கொலை
இந்த சூழலில், கடந்த செப்டம்பர் 10-ம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தலையில் பலத்த காயங்களுடன் விகாஷ் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனில்லாமல் ஒரு வாரத்தில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக விகாஷின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெங்களூர் போலீஸார் அவரது காதலி பூஜாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், "எனது நிர்வாணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விகாஷ் பதிவேற்றியதால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து எனது நண்பரான சுஷிலிடம் கூறினேன். இதைத் தொடர்ந்து, அவனும் அவனது நண்பர்களும் விகாஷை நேரில் வரவழைத்து பேசினர். அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்படவே, சுஷிலும் அவனது நண்பர்களும் விகாஷை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கினர்" எனக் கூறினார்.

வெளிச்சத்துக்கு வந்த 'பெஸ்ட்டி' உறவு
இதனை நம்பிய போலீஸாரும், மருத்துவர் விகாஷை கொலை செய்ததாக சுஷில் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இந்நிலையில், போலீஸாரின் விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்களிடம் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது விகாஷின் காதலி பூஜா கூறியதன் பேரிலேயே அவரை இவர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதாவது, விகாஷுடன் 'லிவ் இன்' உறவில் இருந்தாலும், தனது ஆண் நண்பரான சுஷிலுடன் உல்லாசமாக இருக்க பூஜா ஆசைப்பட்டுள்ளார். இது விகாஷுக்கு தெரியவரவே, அவர் பூஜாவை கண்டித்துள்ளார். இதனால் விகாஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்த பூஜா, சுஷில் மற்றும் அவரது நண்பர்களுடன் இதுகுறித்து பேசியுள்ளார். அவர்களும் சம்மதிக்கவே இந்தக் கொலையை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர். இதையடுத்து, பூஜாவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications