திருமணம் ஆன மறுநாளே.. டிராபிக்கில் புது மனைவியை விட்டுவிட்டு.. தப்பி ஓடிய கணவன்.. விரட்டிய மனைவி
பெங்களூருவில் திருமணம் ஆன மறு நாளே, டிராபிக் சிக்னலில் காரில் இருந்து இறங்கி, மனைவியை விட்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு : பெங்களூருவில் திருமணம் ஆன மறு நாள் காரில் மனைவியுடன் இருந்த கணவன், டிராபிக் சிக்னலில் காரில் இருந்து இறங்கி, மனைவியை விட்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேறு ஒரு பெண்ணுடன் காதலில் இருந்ததால் தன்னைவிட்டுவிட்டு கணவன் சென்றுவிட்டதாக மனைவி குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த மாதம் 15ம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த விஜய் ஜார்ஜ் என்பவருக்கு திருமணம் நடந்தது. அடுத்த நாள் விஜய் ஜார்ஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு காரில் அங்குள்ள தேவாலயத்திற்கு சென்றார்.
விஜய் ஜார்ஜ்ம் அவரது மனைவியும் தேவாலயத்திற்கு சென்றுவிட்டு திரும்ப வந்துகொண்டிருந்தனர். கார் போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தது. அப்போது முன் இருக்கையில் அமர்ந்திருந்த விஜய் ஜார்ஜ் கார் கதவைத் திறந்துகொண்டு சாலையில் ஓட ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் மனைவியும் காரிலிருந்து இறங்கி தன் கணவனை விரட்டி இருக்கிறார்.

தேடினார்கள்
ஆனால், கணவனைப் பிடிக்க அவரால் முடியவில்லை. விஜய் ஜார்ஜ் அப்படியே ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்ததாம். இதற்கிடையே கணவன் வீட்டாரும், பெண் வீட்டாரும் இணைந்து விஜய் ஜார்ஜைத் தேடியிருக்கிறார்கள். ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

வேறு பெண்ணுடன் தொடர்பு
அந்த புகாரில் விஜய் ஜார்ஜின் மனைவி கூறியிருந்ததாவது: "என்னுடைய கணவர் கோவாவில் வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது அங்குள்ள ஒரு பெண்ணுடன் என் கணவருக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. திருமணத்துக்கு முன்பே அது பற்றி என்னிடம் கூறியிருந்தார். அதேநேரம் அந்தப் பெண்ணுடன் தொடர்பைத் துண்டித்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

புகைப்படங்கள்
அதனால் தான் அவரைத் திருமணம் செய்ய சம்மதித்தேன். ஆனாலும் அந்தப் பெண் என் கணவர் விஜயஜார்ஜ் உடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அதோடு இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டியிருக்கிறார், அதனால் தான் அந்த பெண்ணின் மிரட்டலுக்கு பயந்து ஓடிவிட்டார்.

ஏற்கனவே திருமணம்
அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையிலும் இருந்தார். அவர் பாதுகாப்பான முறையில் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" இவ்வாறு விஜய ஜார்ஜின் மனைவி புகாரில் தெரிவித்திருந்தார். இப்போது இருவீட்டாரின் குடும்பத்தோடு போலீஸாரும் விஜய் ஜார்ஜைத் தேடி வருகிறார்.












Click it and Unblock the Notifications