கர்நாடகா: முந்தைய காங்-மஜத ஆட்சியை கவிழ்த்ததில் சித்தராமையாவுக்கும் பங்கு- கொளுத்தி போடும் பாஜக
பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்ததில் தற்போது முதல்வர் பதவிக்கு முன்னணியில் நிற்கும் சித்தராமையாவுக்கும் பங்கு இருக்கிறது என்கிறது பாஜக.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் என்பதில் பெரும் இழுபறி நீடிக்கிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார் இருவருமே முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

இது தொடர்பாக டெல்லியில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கர்நாடகா மாநில தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சித்தராமையாவுக்கு எதிராக பகீர் குற்றச்சாட்டுகளை கர்நாடகா பாஜக முன்வைத்து வருகிறது. குமாரசாமி தலைமையிலான மஜத- காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கு 17 எம்.எல்.ஏக்கள் காரணமாக இருந்தனர். அவர்களில் ஒருவர் தற்போதைய பாஜக மூத்த தலைவர் சுதாகர். முந்தைய ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக சுதாகர் கூறியதாவது: 2018-ம் ஆண்டு எம்.எல்.ஏக்கள் தங்களது குறைகளை கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சித்தராமையாவிடம் தெரிவித்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் சித்தராமையா தம்மால் எதுவும் செய்ய இயலாது என கைவிரித்தே வந்தார். தமது தொகுதியிலேயே கூட மஜத- காங்கிரஸ் அரசு எந்த ஒரு பணியும் செய்யாமல் முடக்கி வைத்துள்ளது எனவும் குமுறியிருந்தார். 2109-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் வரை சித்தராமையா காத்திருந்தார். அதற்கு பிறகு ஒருநாள் கூட காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு நீடிப்பதை சித்தராமையா விரும்பாமல் கவிழ்ப்பதில் குறியாக இருந்தார். காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி கவிழ்வவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக பக்கம் போவதற்கும் தாம் உடந்தையாக இல்லை என்பதை சித்தராமையா மறுக்க முடியுமா?. இவ்வாறு சுதாகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவின் இந்த கேள்விகள், முதல்வர் பதவிக்கான ரேஸில் முன்னணியில் இருக்கும் சித்தராமையாவுக்கு நெருக்கடி தரக் கூடும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications