கல்யாண கர்நாடகா சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் "வட கர்நாடகா" தனி மாநிலம் கேட்போம்.. பாஜக மிரட்டல்!
பெங்களூர்: கல்யாண கர்நாடகா பகுதிக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் வட கர்நாடகாவை பிரித்து தனி மாநிலம் உருவாக்க கோருவோம் என பாஜக மிரட்டல் விடுத்துள்ளது. கல்யாண கர்நாடகாவுக்கு அரசியல் சாசனத்தின் 371J பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதை நீக்கக் கூடாது எனவும் பாஜக எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னால் வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடாகாவில் பெலகாவி, பாகல்கோட், பீதர், கல்புர்கி, யாத்கிர், ராய்ச்சூர், பெல்லாரி, கொப்பல், தார்வார்ட், ஹவேரி உள்ளிட்ட பகுதிகள் ஹைதராபாத் கர்நாடகா அல்லது கல்யாண கர்நாடகா என அழைக்கப்படுகிறது. ஹைதராபாத் நிஜாம் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் வெவ்வேறு பகுதிகளாக இவை இருந்தன. பின்னர் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டன. 2019-ம் ஆண்டுதான் ஹைதராபாத்- கர்நாடகா என்பது கல்யாண கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யபட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதேபோல 2012-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அரசியல் சாசனத்தின் 371 (J) பிரிவின் கீழ் கல்யாண கர்நாடகாவுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. ரூ2,500 கோடியில் கல்யாண கர்நாடகா மேம்பாட்டுக்கு என தனி வாரியமும் அமைக்கபட்டது. கல்யாண கர்நாடகா பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 80% வரை வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவதும் கட்டாயமாக்கப்பட்டது.
ஆனாலும் 2018-ம் ஆண்டு முதல் கல்யாண கர்நாடகாவை கர்நாடகா அரசுகள் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி வடகர்நாடகா தனி மாநில கோரிக்கையை முன்வைத்து அவ்வப்போது போராட்டங்கள், முழு அடைப்பு நடத்தப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த பிராந்தியத்தில் கிருஷ்ணா மற்றும் மகதாயி நதிநீர் பிரச்சனையும் மிக முக்கியமானது. கிருஷ்ணா நதிநீர் பிரச்சனையானது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களுடன் தொடர்புடையது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கும் சென்றன.
இந்த பின்னணியில் பாஜக எம்.எல்.ஏ பசனகவுடா பட்டீல் யத்னால், வட கர்நாடகா மாநில கோரிக்கை குறித்து பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. விஜயாப்புராவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பசனகவுடா பட்டீல் யத்னால், கல்யாண கர்நாடகாவுக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். அப்படி கல்யாண கர்நாடகாவின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் நாங்கள் வட கர்நாடகா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்துவோம். மடாதிபதிகள் எந்த கட்சியின் ஆட்சியின் விவகாரங்களிலும் தலையிடக் கூடாது. அப்படி தலையிடுகிற உரிமையும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications