கொரோனா விவகாரத்தில் மதத்தை பரப்பிய பெங்களூர் பாஜக எம்பி நிருபர்களிடம் பட்டபாடு!
பெங்களூர்: பெருநகர் பெங்களூரு மாநகராட்சி வார் ரூமில் பணியாற்றும் முஸ்லிம் ஊழியர்களை மட்டும் குறிவைத்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட காரணமாக இருந்தவரும், பெங்களூர் பாஜக எம்பியுமான, தேஜஸ்வி சூர்யா, இதுதொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார்.
Recommended Video
பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு பெருநகர் பெங்களூர் மாநகராட்சி மூலமாக மருத்துவமனைகளின் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு - சென்னையில் தொடங்கி வைத்தார் சேகர்பாபு
ஆனால், ஆக்சிஜன், வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு படுக்கையை ஒதுக்கீடு செய்யாமல் சாதாரண நோயாளிகள் பணம் கொடுத்தால் கூட அவற்றை ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அடாவடி செய்த தேஜஸ்வி
ஜெயநகர் பகுதியிலுள்ள பெங்களூரு தெற்கு மண்டலத்திற்கான வார் ரூம் அலுவலகம் சென்ற பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மற்றும் சில பாஜக எம்எல்ஏக்கள் அங்கே பணியாற்றக்கூடிய 17 முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பெயரை மட்டும் ஊடகத்துக்கு முன்பாக வாசித்துக் காட்டி, இவர்கள்தான் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சாட்டினார்.
பாஜக எம்எல்ஏ பகீர் கேள்வி
தேஜஸ்வி சூர்யாவின் உறவுக்காரர், பசவனகுடி தொகுதி, பாஜக எம்எல்ஏ ரவி சுப்பிரமணியா. இவரது சிபாரிசின் பேரில்தான் பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதி சீட் தேஜஸ்வி சூர்யாவுக்கு கிடைத்ததாக கூறப்படுவது உண்டு. இவரும் அன்றைய தினம் வார் ரூமுக்கு தேஜஸ்வியோடு சென்றிருந்தார். 17 முஸ்லிம்களின் பெயர்களை தேஜஸ்வி சூர்யா வாசித்துக் காட்டிய பிறகு அங்கிருந்த அதிகாரிகளைப் பார்த்து , ரவி சுப்ரமணியா "இவர்களை மதரஸாவுக்கு நியமனம் செய்து உள்ளீர்களா அல்லது மாநகராட்சிக்கு நியமனம் செய்துள்ளீர்களா" என்று கேள்வி எழுப்பினார் .
ஹஜ் கமிட்டியா என்று கேள்வி
இவருடன் இருந்த மற்றொரு பாஜக எம்எல்ஏ அங்கிருந்த பெண் அதிகாரியை பார்த்து , இந்த 17 பேரையும் ஹஜ் கமிட்டிக்கு நியமனம் செய்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பினார். இஸ்லாமியர்களுக்கு எந்த பணியும் தரக்கூடாது என்ற தொனியில் இவர்களின் பேச்சு அமைந்திருந்ததால் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருந்தது இந்த சம்பவம்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பேட்டியளிக்க நேற்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு தேஜஸ்வி சூர்யா ஏற்பாடு செய்திருந்தார். எதற்காக 17 முஸ்லிம் ஊழியர்களை மட்டும் குறிப்பிட்டு நீங்கள் பட்டியல் வெளியீட்டீர்கள், இதன் காரணமாக அவர்கள் இரண்டு முறை காவல்நிலையத்துக்கு சென்று விசாரணைக்கு ஆஜராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதே என்று நிருபர்கள் கேட்டபோது, என்னிடம் தரப்பட்ட பட்டியலை நான் வாசித்தேன். அவ்வளவுதான். எதற்காக எந்த வழியில் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள் என்பதுதான் எனது கேள்வியாக இருந்தது. வீடியோவை வேண்டுமானால் திரும்ப நீங்கள் பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
மவுனமான தேஜஸ்வி சூர்யா
இது மதரசாவா இவர்களை வேலைக்கு சேர்க்க.. என்று உங்கள் கட்சி எம்எல்ஏ, உங்கள் பக்கத்தில் நின்று கேள்வி எழுப்பினார். அதை ஏன் அனுமதித்தீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, நான் அதுபோல எந்த வார்த்தையும் பேசவில்லை. நான் பேசிய வார்த்தைக்கு மட்டும் என்னை நீங்கள் பொறுப்பாளியாக்குங்கள் என்று தெரிவித்தார் தேஜஸவி சூர்யா. உங்களது கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் உங்களுடன் நின்றுகொண்டு முஸ்லிம்கள் பற்றி அவதூராக பேசும்போது நீங்கள் தடுக்காமல் எதற்காக சும்மா இருந்தீர்கள் என்று நிருபர் ஒருவர் மடக்கி கேள்வி கேட்டபோது, பதில் சொல்ல முடியாமல் சில வினாடிகள் மவுனமாக இருந்தார் தேஜஸ்வி சூர்யா.
நோக்கம்
பின்னர் அவர் கூறுகையில் உங்களுக்கு ஏதாவது அர்ஜெண்டா இருக்கக்கூடும். ஆனால் எனது அஜெண்டா ரொம்பவே ஓபனாக இருக்கிறது. மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டேன் என்றார்.
அடுத்த கேள்வி ப்ளீஸ்
கொடுத்த லிஸ்டை வாசித்தேன் என்கிறீர்கள். ஆனால், நீங்கள் பட்டியலில் குறிப்பிட்ட 17 இஸ்லாமியர்கள் காவல்துறையினரால் ஏன் விசாரிக்கப்பட்டார்கள் என்ற நிருபரின் கேள்விக்கு, "வேறு ஏதாவது கேள்வி இருக்கிறதா" என்று சொல்லிய தேஜஸ்வி இதற்கு பதில் அளிக்காமல் நழுவிக் கொண்டார்.
மாநகராட்சியிடம் கேட்க வேண்டுமாம்
மேலும் தான் வாசித்த பட்டியலில் உள்ள 17 பேரும் மாநகராட்சியின் தற்காலிக ஊழியர்கள். அவர்களை பணியில் சேர்ப்பதும் பணியில் இருந்து தூக்குவதும், எனது பணி கிடையாது. எதற்காக அவர்கள் நீக்கப்பட்டார்கள் என்பதை மாநகராட்சியிடம் கேளுங்கள் என்று ஒரு பதிலை சொன்னார் தேஜஸ்வி சூர்யா. பத்திரிகையாளர்கள் அனைவரும் இதைக் கேட்டு ஆடிப்போய் விட்டனர். இவர் வாசித்த பட்டியல் காரணமாகத்தான் 17 பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அதுவும் அத்தனை ஊடகங்களிலும் வெளியாகி மக்கள் பார்த்த நிலையில், அவர்களை ஏன் நீக்கினார்கள் என்று மாநகராட்சியிடம் கேட்க சொல்கிறாரே என்று பத்திரிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.