கம்பலா உசைன் போல்ட் ஸ்ரீனிவாச கவுடா.. நடுவர்களை கைக்குள் போட்டு மோசடி.. போலீசில் புகார்!
பெங்களூரு: மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் சாதனையை முறியடித்த கம்பலா வீரர் ஸ்ரீனிவாச கவுடாவின் சாதனை போலியானது என்று காவல்துறையினரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக், உலக தடகள போட்டிகள் என பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்ததோடு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அளவிலான ஓட்டப்பந்தய போட்டிகளின் ஜாம்பவான் வீரராக பெயர்பெற்றவர் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட். இவரை உலக மக்கள் அனைவரும் மின்னல் வேக மனிதர் என்றும் அழைப்பார்கள். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.58 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
ஆனால் 2020ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கம்பலா போட்டி வீரரான ஸ்ரீனிவாச கவுடா உசைன் போல்ட் சாதனையையே முறியடித்துள்ளார் என்று செய்திகள் வெளியானது. அதுவும் 142.5 மீட்டர் தூரத்தை, வெறும் 13. 62 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார் என்று கூறப்பட்டது. அதில் 100 மீ தூரத்தை ஸ்ரீனிவாச கவுடா 9.55 வினாடிகளில் கடந்ததாக கூறப்பட்டது.
இது உலக அளவில் பெரும் ஆச்சரியத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. 142 மீட்டர் தூரத்தை 13.6 வினாடிகள் எருதுகளுடன் ஓடுவது என்பது கற்பனையிலும் நினைக்க முடியாத சாதனை. அதனை எப்படி ஸ்ரீனிவாச கவுடா படைத்தார் என்று கேள்வி எழுந்தது.
இன்னொரு ஸ்ரீனிவாச கவுடாருக்கு பத்திரிகைகள், ரசிகர்கள் என ஏராளமானோர் பாராட்டு தெரிவித்தனர். இதனால் ஒரே நாளில் ஸ்ரீனிவாச கவுடா உலக பிரபலமாக மாறினார். இந்த நிலையில், கம்பலா சமிதி உறுப்பினரான லோகேஷ் ஷெட்டி, ஸ்ரீனிவாச கவுடா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் கம்பலா வீரர் ஸ்ரீனிவாச கவுடா போலியான சாதனைகளை தயாரித்து லட்சக்கணக்கில் பரிசுத்தொகையையும் அரசு சலுகைகளையும் பெற்றுள்ளார். ஸ்கை வீவ் என்ற அமைப்பு ஸ்ரீனிவாச கவுடாவின் ஓட்ட நேரத்தைக் கணக்கிட்டு உசைன் போல்ட் சாதனையை முறியடித்ததாக அறிவித்தது.
ஆனால் அது போலியானது. கம்பலா கமிட்டியில் இதுபோல் ஏராளமான மோசடிகள் நடைபெற்றுள்ளது. இதில் முதல் குற்றவாளியாக கம்பலா கமிட்டியின் தலைவர் குணபலா கடம்பா, இரண்டாவது குற்றவாளி ஸ்ரீனிவாச கவுசா மற்றும் மூன்றாவது குற்றவாளி ஸ்கை லீவ் அமைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் போலி சான்றிதழுக்கான ஆதாரங்களையும் லோகேஷ் ஷெட்டி வெளியிட்டுள்ளார். இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.