தமிழகத்துக்கான நீரை உடனே நிறுத்துங்க! எடியூரப்பா உட்பட பாஜக தலைவர்கள் தர்ணா! பரபரக்கும் பெங்களூர்
பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து பெங்களூரில் இன்று பாஜக தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாஜக மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உள்பட பலர் பங்கேற்றனர். இந்த வேளையில், காவிரி விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட மாட்டார் என எடியூரப்பா உறுதியாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. மண்டியாவில் பந்த் நடந்தது. அதன்பிறகு நேற்று பெங்களூரில் பந்த் நடந்து முடிந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக வரும் 29ம் தேதி கர்நாடகாவில் பந்த் நடத்தப்பட உள்ளது. இந்த பந்த்தில் 2 ஆயிரம் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளதாகவும், 1 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
தற்போதைய நிலையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என விவசாய அமைப்புகள், கன்னட அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் தான் தொடர்ந்து பந்த் நடத்தி வருகின்றனர். அதேபோல் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து பந்த்துக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
இதற்கிடையே தான் நேற்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடகாவில் மழை பெய்யவில்லை. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு வைத்த வாதம் ஏற்கப்படவில்லை. அதோடு நாளை முதல் அக்டோபர் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக்கோரி காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
இது கர்நாடகாவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த உத்தரவை கர்நாடகா மீற முடியாது. ஆனால் தண்ணீர் திறந்துவிட்டால் கர்நாடகாவில் போராட்டம் என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கர்நாடகாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கூடாது என இன்று பெங்களூர் விதானசவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த தர்ணாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாஜக மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான சதானந்த கவுடா, பிற எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும் எனவும், கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இந்த வேளையில் எடியூரப்பா பேட்டியளித்தார். அப்போது அவர், ‛‛கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் தமிழ்நாடு ஏஜென்ட் போல் செயல்பட கூடாது. அவர்கள் மாநிலத்தின் நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும். கர்நாடகா அணைகளில் குடிநீருக்கே போதிய அளவு தண்ணீர் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் பிரதமர் மோடி தலையிட மாட்டார்'' என்றார்.












Click it and Unblock the Notifications