நீங்க நினைக்கிற மாதிரி தமிழ்நாட்டுடன் சண்டை போட முடியாது: பாஜகவுக்கு டிகே சிவகுமார் பொளேர் பதிலடி!
பெங்களூர்: அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் காவிரி விவகாரத்தில் மோதல் போக்கை கர்நாடகா அரசு கடைபிடிக்க விரும்பவில்லை என பாஜகவுக்கு கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் பதிலளித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் இன்று டிகே சிவகுமார் கூறியதாவது: காவிரி பிரச்சனையில் புதிய பெஞ்ச் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வரைக்கும் 10,000 கன அடிநீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. இதற்கு நாம் கால அவகாசம் கோரியிருக்கிறோம். ஏனெனில் கர்நாடகா அணைகளில் நீர் பற்றாக்குறை இருக்கிறது.

காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுடன் இணைந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? தமிழ்நாட்டுக்காக நாங்கள் செயல்படுவதாக பாஜக, மஜத தலைவர் குமாரசாமி ஆகியோர் அர்த்தமற்ற, ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். காவிரி நீரை வைத்துக் கொண்டு தமிழ்நாடும் என்ன செய்யும்? விவசாயத்துக்குதானே பயன்படுத்தப் போகிறது? பாஜக, மஜத குற்றம்சாட்டுவதைப் போல தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீர் திறந்துவிடவே இல்லை. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீர் திறந்துவிடப்பட்டது என்பதற்கான முழுமையான விவரம் எங்களிடம் இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் அதனை நாங்கள் வெளியிடவும் தயாராக இருக்கிறோம்.
கர்நாடகா விவசாயிகளின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது. அதற்காகவே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால் பாஜக, மஜத கட்சிகள் என்ன செய்கின்றன? செய்தன? என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள். நமது விவசாயிகளின் நலனுக்காக காவிரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 23-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டு பெற இந்த அரசு தயாராக உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் நாம் மேல்முறையீடு செய்துள்ளோம். அனைத்து கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து நாம் ஆலோசித்து முடிவு எடுப்போம். வறட்சி காலங்களில் நதிநீர் பங்கீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை விவாதித்து முடிவு செய்வோம். இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.












Click it and Unblock the Notifications