"அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம்.." கர்நாடக தேர்தல்.. காங்கிரஸ் பரபர குற்றச்சாட்டு
பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் வினய் குமார் சொரகே பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கர்நாடகாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், அதைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கர்நாடகா: அங்கே இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே தான் தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளுக்கும் அங்கே தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால், அங்கே பாஜக தீவிர பிரசாரம் செய்து வருகிறது. கர்நாடக தேர்தல் பொறுப்பாளராகத் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் வினய் குமார் சொரகே பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பரபர குற்றச்சாட்டு: தமிழக பாஜக தலைவரும், மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அண்ணாமலை உடுப்பியில் வந்திறங்கிய ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் அடங்கிய பேக் இருந்ததாக வினய் குமார் சொரகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வினய் குமார் சொரகே கௌப் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்டுக் கட்டாகப் பணம்: மேலும், பணம் இருந்த விவகாரம் குறித்து ஏற்கனவே காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உடுப்பில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு நடந்த நிலையில், அப்போது தான் அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் வினய் குமார், "பொய்யான அரசியல் பிரசாரத்தின் மூலம் கடந்த தேர்தலில் கடலோர மாவட்டங்களில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்த முறை நிச்சயம் அது பலிக்காது" என்றார். உடுப்பி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காஞ்சனும் இதே கருத்தைத் தான் கூறியிருந்தார்.
கர்நாடக தேர்தல்: கர்நாடகாவில் மொத்தம் 224 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே இப்போது பாஜகவுக்கு 11 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 74 இடங்களும் உள்ளது. அதேபோல ஜேடிஎஸ் கட்சிக்கு 27 இடங்கள் உள்ளது. அங்கே இருக்கும் 224 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் அங்கே தனித்துக் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications