உதயநிதி ஸ்டைலில் கர்நாடகா! மோடிக்கு எதிராக ‛சொம்பு’ தூக்கி போராட்டம்! பாஜகவை அலறவிடும் காங்கிரஸ்
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்த அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள், உதயநிதி ஸ்டாலினின் பாணியை பின்பற்ற தொடங்கியுள்ளனர். விரைவில் இம்மாநிலத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸின் 13 பைசா பிரசாரம் கவனம் ஈர்த்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தற்போது தீவிரமடைந்துள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிரான பரப்புரையை காங்கிரஸ் தீவிரப்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. பாஜகவை லோக்சபா தேர்தலிலும் வீழ்த்த காங்கிரஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக வரி பகிர்வு, வறட்சி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கையில் எடுத்திருக்கிறது.
15வது நிதி கமிஷனுக்கு பிறகு கர்நாடக மாநிலத்திற்கு சேர வேண்டிய வரி பகிர்வு போதிய அளவில் கிடைப்பதில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.45,000க்கு மேல் கர்நாடகாவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இந்த அநீதியை ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
மேலும், "வரிப் பகிர்வைக் குறைத்ததன் மூலம் கர்நாடகாவுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது. கன்னடர்கள் செலுத்தும் வரி எங்களுக்கு இக்கட்டான காலங்களுக்குப் பயன்படாமல் வட மாநிலங்களுக்குச் செல்கின்றன. தென் மாநிலங்கள் செலுத்தும் வரிகளுக்குக் கடனாளியாக இருக்கும் வட மாநிலங்கள் ஒருபோதும் கர்நாடகாவுக்கு முன்மாதிரியாக இருக்க முடியாது" என்று தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தேர்தல் பரப்புரையிலும் இதையே பாயிண்டை வைத்து பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கட்டம் கட்டி வருகிறார்கள்.
மறுபுறம் கடந்த 6 மாதமாக கர்நாடகா கடும் வறட்சியில் தவித்து வருகிறது. வறட்சியை சமாளிக்க மத்திய அரசிடம் ரூ.17,400 கோடியை உதவியாக கோரியிருந்தது. மத்திய அரசும் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்தது. ஆனால், தற்போது வரை எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை. எனவே இந்த விஷயங்களையும் முன்வைத்து காங்கிரஸ் கட்சியினர் இன்று கையில் 'சொம்பு' ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர்.
தேர்தல் பரப்புரைக்காக இன்று பிரதமர் மோடி கர்நாடகா வந்திருந்தார். அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கையில் சொம்பு ஏந்தி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா, "நாங்கள் மத்திய அரசுக்கு வரியாக 1 ரூபாய் கொடுத்தால், அவர்கள் பதிலுக்கு வெறும் 13 பைசாவை மட்டுமே திருப்பி கொடுக்கிறார்கள். வறட்சி நிதியை கேட்டதற்கு பிரதமர் மௌனம் காக்கிறார். எனவே சொம்பு ஏந்தி போராட்டம் நடத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் 29 பைசா விவகாரத்தை பாஜகவுக்கு எதிரா திமுக முன்னெடுத்திருந்தது. அதாவது தமிழ்நாடு மத்திய அரசுக்கு 1 ரூபாயை வரியாக செலுத்தினால், அதில் வெறும் 29 பைசாவைதான் மத்திய அரசு திரும்ப தருகிறது. எனவே, இதனை வைத்து மத்திய அரசை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். தேர்தல் பரப்புரையில் இந்த 29 பைசா பிரசாரம் பெரும் கவனம் ஈர்த்திருந்தது.
இப்போது இதே பாணியைதான் காங்கிரஸ் கர்நாடகாவில் கையில் எடுத்திருக்கிறது. விரைவில் இம்மாநிலத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸின் 13 பைசா பிரசாரம் கவனம் பெற தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications