கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்.. 2 பேருக்கு கல்தா… 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
பெங்களுரு: கர்நாடகாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் புதியதாக 8 பேர் அமைச்சர்களாக பதவிஏற்றுக் கொண்டனர்.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. கூட்டணி பிணக்குகள் அவ்வப்போது எட்டிபார்த்தாலும் ஆட்சி ஸ்டெடியாக போய்க் கொண்டிருக்கிறது. மேகதாது விஷயத்தில் அம்மாநிலத்தில் ஒற்றுமையை கடைப்பிடித்து வருகின்றன.

இந் நிலையில், கூட்டணி அமைச்சரவையில் விரிவாக்கம் தேவை என்று கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்றது. மொத்தம் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
சதீஷ் ஜார்கிஹோலி, ரஹீம் கான், ஷிவாலி, எம்டிபி நாகராஜ், துக்காராம், எம்பி பாட்டீல், பரமேஸ்வர் நாயக் மற்றும் திம்மாபூர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நகராட்சி நிர்வாக அமைச்சர் ரமேஷ் ஜார்க்கோலி, வனத்துறை அமைச்சர் சங்கர் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பதவியேற்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கம் முன்பாக, எம்எல்ஏ ராமலிங்க ரெட்டியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். ராமலிங்க ரெட்டிக்கு அமைச்சர் பதவி ஏன் தரவில்லை என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
இதனிடையே, 19 எம்எல்ஏக்களுக்கு நகராட்சி நிர்வாக அமைப்புகளிலும், நாடாளுமன்ற செயலக துறைகளிலும் பொறுப்பு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications