கர்நாடகாவை உலுக்கும் ஒப்பந்ததாரர் தற்கொலை- மல்லிகார்ஜூன கார்கே மகனின் அமைச்சர் பதவிக்கு வேட்டு?
பெங்களூர்: கர்நாடகா ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலைக்கும் அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கும் (காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகன்) எந்த தொடர்பும் இல்லை; பிரியங்க் கார்கே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை என அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலை விவகாரத்தில் தம் மீது பாஜகவினர் சேற்றை வாரி இறைக்கின்றனர் என்றும் அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் பிரியங்க் கார்கே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துதான் ஆக வேண்டும் என கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் முறைகேடு நடைபெற்றது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. வால்மீகி வளர்ச்சி வாரிய அதிகாரியின் தற்கொலையால் இந்த விவகாரம் வெளியே வந்தது. இதனால் அமைச்சர் நாகேந்திரா பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலை விவகாரம் கர்நாடகாவில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலைக்கு அமைச்சர் பிரியங்க் கார்கேதான் காரணம்; ஆகையால் அவர் ராஜினாமா செய்தாக வேண்டும் என எதிர்க்கட்சிகளான பாஜக, ஜேடிஎஸ் போர்க்கொடி தூக்கி உள்ளன. ஆனால் தமக்கும் சச்சின் தற்கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார் அமைச்சர் பிரியங்க் கார்கே.
இது தொடர்பாக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், எனக்கு எதிராக பாஜகவினர் சேற்றைத்தான் வாரி வீசுகிறார்கள். எனக்கு எதிரான ஆதாரத்தை பாஜகவினர் வெளியிட வேண்டும். பாஜக குற்றம்சாட்டிவிட்டதாலேயே நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட முடியுமா? என் வீட்டை கூட பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாம். இந்தப் போராட்டங்களைக் கண்டு மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள் என்றார்.
இதேபோல கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், சச்சின் தற்கொலைக்கும் அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கும் எந்த தொடர்புமே இல்லை. சச்சின் தற்கொலை செய்யும் முன்னர் எழுதிய கடிதத்தில் பிரியங்க் கார்கே பெயரை குறிப்பிடவும் இல்லை. அவரது நேர்மையை பற்றி எங்களுக்கு தெரியும். ஆகையால் பிரியங்க் கார்கே ராஜினாமா என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றார்.
ஆனால் கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, பிரியங்க் கார்கேதான் சச்சின் தற்கொலைக்கு காரணம். ஆகையால்தான் பிரியங்க் கார்கே ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறோம். சச்சின் தற்கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications