'பிரதமரே, டிவியில் தோன்றுவதால் மட்டும் கொரோனா ஓடிவிடாது.. பொறுப்புடன் இருங்கள்'.. சித்தராமையா சுளீர்
பெங்களூரு: பிரதமர் மோடி எந்தவொரு நோக்கமும் இல்லாமல் வெறுமென டிவியில் தோன்றி பேசுவதால் மட்டும் கொரோனா ஒழிந்துவிடாது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு இடங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மோடி ஆலோசனை
இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆக்சிஜன் தட்டுப்பட்டால் பெரும் வலியை அனுபவித்து வருகின்றனர். இதனால் விரைவில் ஏதேனும் பேரபாயம் நிகழும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அப்படி எதாவது நிகழ்ந்தால் நிச்சயம் நம்மை நாமே மன்னித்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தார்.

டிவியில் தோன்றுவதால் கொரோனா போகாது
இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மோடியை மிகக் கடுமையாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். சித்தராமையா தனது ட்விட்டரில், "பிரதமர் மோடி, நீங்கள் எந்த நோக்கமும் இல்லாமல் வேறுமென டிவியில் தோன்றுவதால் மட்டுமே வைரஸ் ஓடிவிடாது. அதுவுமில்லாமல் மாநில முதல்வர்களுக்குப் பாடம் எடுக்க நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் இல்லை. முதலில் மாநில அரசின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் பொறுப்புடன் செயல்படுங்கள்.

ஆக்சிஜன் ஏற்றுமதி ஏன்
அனைத்து மாநிலங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழக்கின்றனர். ஆக்சிஜன் வேண்டும் என மாநில அரசுகள் பிரதமரிடம் கேட்டால், அவர் ஆக்சிஜனை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார். நம் நாட்டில் பற்றாக்குறை இருந்தபோது அவர் ஏன் ஆக்சிஜன் ஏற்றுமதியை அதிகரித்தார்?

கொரோனா படுக்கைகள்
பெங்களூருவில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கை 7621. அதில் ஏற்கனவே 6124 படுக்கைகளில் நிரம்பிவிட்டன. இப்போது 1487 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது. ஆனால், இங்கு தினசரி 15,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. இங்குள்ள நிலைமை கர்நாடக முதல்வர் பிரதமரிடம் கூறினாரா?

திறமையற்ற முதல்வர்
பெங்களூருவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 98% ஐசியு படுக்கைகள் நிரம்பிவிட்டன. 97% வென்டிலேட்டர்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது நோயாளிகள் என்ன செய்ய வேண்டும் பிரதமரே? கர்நாடக முதல்வர் நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார். இப்போது கர்நாடக மக்கள் முதல்வரிடம்தான் தீர்வு பற்றிக் கேட்க வேண்டும். இப்படியொரு திறமையற்ற முதல்வரை வைத்துக்கொண்டு மோடி எப்படி கொரோனாவை கட்டுப்படுத்துவார்? எனச் சரமாரியாகத் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது ட்வீட்களை பலரும் ரிட்வீட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications