2000 கோடி ரூபாய் நிதி மோசடி.. பெங்களூர் நிறுவனத்திடம் ஏமாந்த மாநகராட்சி கவுன்சிலர்கள்.. ஷாக் தகவல்
பெங்களூர்: பெங்களூரை உலுக்கிய 2000 கோடி ரூபாய் நிதி மோசடியில் தொடர்புள்ள ஐஎம்ஏ நிறுவனத்தில், பல கவுன்சிலர்களும் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு சிவாஜி நகரில் இயங்கி வருவது, ஐஎம்ஏ நிதி நிறுவனம். இஸ்லாமிக் பேங்க் என்ற அறிமுகத்தோடு இந்த நிறுவனம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதன் நிறுவனர், முகமது மன்சூர் கான், கடந்த இரு நாட்களாக திடீரென தலைமறைவாகி விட்டார். இதையறிந்த, வாடிக்கையாளர்கள் அந்த நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காவல்துறையில் வரிசையாக புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன.
மன்சூர் கான், தற்கொலை செய்யப்போவதாக வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டுள்ளார். அவர், இப்போது எங்கே இருக்கிறார் என்பதே, தெரியவில்லை. காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சியின் கவுன்சிலர்கள், பலரும் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் சுமார் 20 கவுன்சிலர்கள் இதில், முதலீடு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. பெங்களூரில் மொத்தம் 198 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 20 வார்டுகளில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலராக உள்ளனர்.
இவர்கள் அனைவருமே கணிசமான தொகையை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். மன்சூர் கான் தப்பி ஓடிவிட்ட நிலையில், தங்கள் முதலீடு குறித்து அச்சமடைந்துள்ள இவர்கள், இன்று மாலை பிரேசர் டவுன் பகுதியில் கூடி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த நிதி மோசடி தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கர்நாடக உணவு விநியோகத் துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், சிறுபான்மையின பிரதிநிதிகள் சிலரை அழைத்துக் கொண்டு, இன்று மாநில உள்துறை அமைச்சர் எம்.பி. பாட்டிலை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கை தற்போது கமர்ஷியல் ஸ்ட்ரீட் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்றும் கூட நிதி நிறுவனத்தின் ஆன்லைன் கணக்கில் ரூ.3 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு, பிறகும்கூட 3 கோடி ரூபாய் வரை இன்று ஒரே நாளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது காவல்துறையினரையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications