40% கமிஷன் விவகாரம்.. ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும்! கர்நாடகா நீதிமன்றம் உத்தரவு
பெங்களூர்: அவதூறு வழக்கு தொடர்பாக வரும் 7ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று, காங்கிரஸின் ராகுல் காந்திக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது 40% கமிஷன் எனும் பிரசாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்திருந்தது. இந்த யுக்தி நல்ல பலனை கொடுத்தது. எனவே தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இப்படி இருக்கையில், இது குறித்து தற்போது சர்ச்சை மேலெழுந்திருக்கிறது. அதாவது 40% கமிஷன் என பாஜக மீது அவதூறு பரப்பியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது.

40% கமிஷன் விவகாரம்: அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அதற்கு ஒதுக்கப்படும் தொகைகளில் 40 சதவிகிதம் வரை கமிஷனாக கொடுக்க வேண்டும் என அமைச்சர்கள் வற்புறுத்துவதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். ஊழலே எங்கள் ஆட்சியில் கிடையாது என்று கூறி வந்த பாஜகவுக்கு கர்நாடக மாநிலத்தில் மேலெழுந்துள்ள இந்த புகார்கள் புதிய தலைவலியை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்த ஒப்பந்ததாரர்கள் ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தனர்.
பேட்டி: பெங்களூருவைச் சேர்ந்த ஒப்பந்ததாரரும், நகர முனிசிபாலிட்டி ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவருமான ஆர் அம்பிகாபதி சமீபத்தில் பெங்களூருவின் டோம்லூரில் ரூ.5 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம் ஒன்றை கட்டியெழுப்பியுள்ளார். இதற்காக அரசு ஒதுக்கிய தொகையில் 40%-ஐ அமைச்சர்களின் சில இடைத்தரகர்களுக்கு லஞ்சமாக கொடுத்ததாக கூறியுள்ளார். இவ்வாறு கொடுக்க தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். இவரது பேட்டி கடந்த 2022ம் அண்டு ட்ரெண்டானது.
பிரசாரம்: இதனை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் கட்சி 40% கமிஷன் என்கிற பிரசாரத்தை மேற்கொண்டிருந்தது. பிரசாரத்தின் ஒரு பகுதியாக நாளிதழ்களில் முழு பக்க விளம்பரங்களையும் கொடுத்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் மீது பாஜக அவதூறு வழக்கை தொடுத்திருக்கிறது. கர்நாடக பாஜக எம்எல்சியும் முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளருமான கேசவ் பிரசாத், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
அதில், "சட்டசபை தேர்தலின் போது, முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, மாநில மக்களை தவறாக வழிநடத்தியுள்ளனர். எனவே ஐபிசி பிரிவு 500ன் கீழ் அவர்களை தண்டிக்க வேண்டும்" என்று குற்றம்சாட்டியிருந்தார்.
ஆஜர்: இந்த வழக்கில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றனர். ஜூன் 1ம் தேதி ராகுல் காந்தி ஆஜராவதாக கூறியிருந்த நிலையில், ஆஜராகவில்லை. எனவே, ஜூன் 7ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராக விளக்கமளித்த ராகுல் காந்தியின் வழக்கறிஞர், "7ம் கட்ட தேர்தல் காரணமாக ராகுல் ஆஜராக முடியவில்லை" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications