கர்நாடகாவில் ஏப்.10 முதல் இரவு நேர ஊரடங்கு அமல் - முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரூ உள்ளிட்ட முக்கிய 7 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடகாவில் சனிக்கிழமை முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளார் எடியூரப்பா.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.

மும்பை, லக்னோ,வாரணாசி, கான்பூர், நொய்டா, காசியாபாத் ஆகிய 6 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. நொய்டா, காசியாபாத்தில் ஏப்ரல் 17-ம் தேதி வரை தினமும் இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் 10 மாநிலங்களில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இதில் கர்நாடகம், தமிழகம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், குஜராத், கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அடங்கும்.
கொரோனாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கும்படி மாநில அரசுகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா ஊரடங்கை இரவு நேரங்களில் அமல்படுத்தலாம் என்றும் மோடி கூறியிருந்தார்.
கர்நாடக மாநிலத்தில் ஏழு நகரங்களில் இரவு ஊரடங்கு விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலாபுராகி, பிடார், மணிபால், துமாகுரு ஆகிய ஏழு நகரங்களில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரு நகரத்தில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. நகரம் முழுவதும் உள்ள உணவகங்கள், பப்களில் 50 சதவீத பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முகக்கவசங்கள், கிருமி நாசினி மற்றும் சரீர இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதும் மூடி சீல் வைக்கப்படும் என்று அறிவித்த நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளார் எடியூரப்பா.












Click it and Unblock the Notifications