பெரிய ட்விஸ்ட்.. தர்மஸ்தலாவில் பெண்களை புதைத்ததாக புகார் கொடுத்தவரே கைது.. போலீசை ஏமாற்றியதால் அதிரடி
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலா கோவில் அருகே ஓடும் நேத்ராவதி கரையோரம் பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைத்ததாக புகார் அளித்த நபரையே எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிறப்பு விசாரணை குழுவினரிடம் தவறான தகவல்கள் அளித்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது இந்த வழக்கில் பெரிய ட்விஸ்ட்டை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில். இந்த கோவில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் தர்மஸ்தலாவில் உள்ளது.

இந்த கோவில் நேத்ராவதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. கர்நாடகா மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இந்நிலையில் தான் கோவிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் போலீசில் பரபரப்பான புகார் அளித்தார்.
மாஜி தூய்மை பணியாளர்
அதில், ‛‛ கடந்த 1995ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 19 ஆண்டுகள் வரை கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றினேன். இந்த காலக்கட்டத்தில் பெண்கள், மாணவிகளின் உடல்களை புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டேன்.
உடல்களில் ஆசிட் தழும்புகள், காயங்கள் இருந்தன. இப்போது கோவிலில் வேலை செய்யவில்லை. கர்நாடகாவை விட்டு வெளிமாநிலத்தில் வசிக்கும் நிலையில் மனம் உறுத்தியதால் புகார் அளித்தேன்'' என்றார்
சிறப்பு விசாரணை குழு
இதனால் பெண்கள் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுபற்றி விசாரிக்க எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புகார்தாரர் அடையாளம் காண்பித்த 13 இடங்களில் உடல்களை தோண்டும் பணி நடந்தது.
அப்போது சில எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் சொல்வது உண்மையாக இருக்கலாம் என்று நம்பப்பட்டது. இதுதொடர்பாக தொடர்ந்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது ஏன்?
இந்நிலையில் தான் புகார் கொடுத்த நபரையே இப்போது சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர். புகார் அளித்த தூய்மை பணியாளர் 70 முதல் 80 உடல்களை புதைத்ததாக கூறினார். ஆனால் சிறப்பு விசாரணை குழுவினரின் தேடுதல் பணியில் அவ்வளவு உடல்கள், எலும்புகூடுகள் கிடைக்கவில்லை.
ஒரு இடத்தில் மட்டுமே சிதைந்த எலும்பு கிடைத்தது. அதிலும் மண்டை ஓடு கிடைக்கவில்லை. இதனால் சிறப்பு விசாரணை குழுவினருக்கு சந்தேகம் எழுந்தது.
இரவு முழுதும் நடந்த விசாரணை
இதுதொடர்பாக நேற்று புகார்தாரரிடம் சிறப்பு விசாரணை குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இரவு முழுவதும் இந்த விசாரணை தொடர்ந்த நிலையில் இறுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தவறான தகவல்களை வழங்கி சிறப்பு விசாரணை குழுவை ஏமாற்றியதாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
யார் அவர்?
இந்த புகாரை அளித்த நபரின் பெயர் இன்னும் போலீசார் வெளியிடவில்லை. அவரது ஊர், தர்மஸ்தலாவில் தூய்மை பணியில் இருந்து விலகிய பிறகு எங்கு வசித்து வந்தார் என்பது பற்றிய விபரங்களை போலீசார் இன்னும் தெரிவிக்கவில்லை. அதோடு அவரது முகத்தையும் இன்னும் போலீசார் காட்டவில்லை. உடல்களை தேடும் பணி உள்பட அனைத்து இடங்களிலும் புகார் கொடுத்த நபர் முகமூடி அணிந்து தான் வலம் வந்தார். இப்படியான சூழலில் அவர் யார்? பின்னணி என்ன? என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
தர்மஸ்தலா வழக்கு கர்நாடகா அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாஜக - காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நேரடியாக மோதிக்கொண்டனர். தர்மஸ்தலா கோவிலின் புகழை களங்கப்படுத்த காங்கிரஸ் இப்படி செய்வதாக பாஜகவினர் குற்றம்சாட்டியிருந்த நிலையில் புகார்தாரர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் வரும் காலத்தில் கர்நாடகா அரசியலில் இந்த விவகாரத்தை பாஜக பெரிய அளவில் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை சாடும் என்பதில் ஐயமில்லை என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications