எலும்பு கூடுகள்.. ஆனால் "தலை" இல்லை! தர்மஸ்தலாவில் தோண்ட தோண்ட வெளியே வரும் பூதம்! நடுங்க வைக்குதே
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா புதைகுழி பற்றிய நீண்டகால விசாரணை ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள ஒருவர் அடையாளம் காட்டிய ஒரு இடத்தில் மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 31 அன்று வியாழக்கிழமை, நேத்ராவதி நதிக்கு அருகில் உள்ள ஆறாவது அகழ்வாராய்ச்சிப் புள்ளியில், இரண்டடி முதல் மூன்றடி ஆழத்தில் இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெல்தங்கடி தாலுகாவில் தர்மஸ்தலா என்ற இடம் இருக்கிறது. அங்கு அமைந்துள்ள ஒரு கோயிலுக்குக் கர்நாடகா மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் வருவார்கள். இதற்கிடையே அந்த கோயில்ல பணியாற்றியதாக கூறப்படும் முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் ஒரு பகீர் புகாரை அளித்திருந்தார்.

பகீர் புகார்
அதாவது அவர் 1995 முதல் 2014 வரை தூய்மை பணியாளராக கோயிலில் வேலை செய்துள்ளார். இந்த 19 ஆண்டுகளில் பெண்கள், மாணவிகளின் உடல்களைப் புதைத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இது கர்நாடக முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், உடல்களைப் புதைத்தாக 13 இடங்களை அந்த நபர் அடையாளம் காட்டினார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக விசாரிக்கக் கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.
எலும்புகள்
இதற்கிடையே இந்த விசாரணை இப்போது திருப்புமுனையை எட்டியுள்ளது. இதுவரை அங்கு எலும்புக் கூடுகள் எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில், இப்போது திடீர் திருப்பம் நடந்துள்ளது. அந்த தூய்மை பணியாளர் அடையாளம் காட்டிய ஒரு இடத்தில் மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 31ம் தேதி நேத்ராவதி நதிக்கு அருகே நடந்த விசாரணையில் 3 அடி ஆழத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 15 எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் சில உடைந்த நிலையில் இருந்தன. அதேநேரம் மண்டை ஓடு இல்லை கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதேநேரம் அது எலும்புக்கூட்டின் எந்தப் பாகம் என்று என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அவை ஓர் ஆணின் எச்சங்களாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. கூடுதல் விவரங்களை உறுதிப்படுத்த தடயவியல் பரிசோதனை தேவைப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அடுத்தகட்டமாக ஏழாவது இடத்தில் எப்போது பணிகளைத் தொடங்கலாம் என்பது குறித்து இன்னும் விசாரணைக் குழு முடிவெடுக்கவில்லை எனத் தெரிகிறது.
15 இடங்கள்
கடந்த ஜூலை 29ம் தேதி இந்த பணிகளைச் சிறப்புப் புலனாய்வுக் குழு செய்யத் தொடங்கியது. தர்மஸ்தலா கோயில் துப்புரவுப் பணியாளர் சொன்ன இடங்களில் வரிசையாக விசாரணையை ஆரம்பித்தனர். அவர் இதுவரை 15 அடையாளங்களை அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது
முதல் 8 இடங்கள் நேத்ராவதி ஆற்றங்கரையோரமும் 3 இடங்கள் ஆற்றுக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை அருகே உள்ளதாக மாத்ருபூமி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள கன்யாதி பகுதியில் இரு இடங்களும் நேத்ராவதியை அஜுகுரியுடன் இணைக்கும் சாலைப் பகுதியில் ஒரு இடமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமெடுக்கும் விசாரணை
தனது உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பல உடல்களைப் புதைத்ததாக அந்த நபர் கூறியிருக்கிறார். அவற்றில் பல சடலங்கள் பெண்களின் உடல்கள் என்றும், அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் போலத் தோன்றியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விசாரணையின்போது சிறப்புப் புலனாய்வு குழுவினர் உடன் வருவாய், வனத்துறை மற்றும் பிற துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது அந்த மாஜி தூய்மை பணியாளர் ஒவ்வொரு இடத்தையும் அடையாளம் காட்டி, உடல்கள் புதைக்கப்பட்ட சூழ்நிலைகளை விளக்கினார்.
சிறப்பு விசாரணைக் குழு இரண்டு நாட்களுக்கு முன் தோண்டிய இடத்தில் பான் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. அதேநேரம் முதல் ஐந்து இடங்களில் மனித எச்சங்கள் எதுவும் மீட்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications