அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி இருக்கு? “பயப்பட வேண்டாம்”.. பெங்களூர் மருத்துவர்கள் தகவல்!
பெங்களூர்: உடல்நலக்குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பூரண நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துவிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை நெருங்கியபோது அவருக்கு திடீரென லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, காரிமங்கலத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனிடம் தகவலைச் சொல்ல, உடனடியாக காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அமைச்சர் அன்பில் மகேஷை அனுமதித்தினர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் அஜீரணம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறி அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை முடித்த பின்னர் அவர் கிருஷ்ணகிரி புறப்பட்டு செல்ல இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், மருத்துவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் அலட்சியமாக இருந்துவிட முடியாது எனக் கூறி, உடனடியாக இருதய நிபுணரிடம் ஒப்பீனியன் பெற வேண்டும் எனக் கூறி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்ல பரிந்துரைத்தனர்.
அதன்படி, காரிமங்கலத்தில் இருந்து காரில் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அன்பில் மகேஷ். பெங்களூரில் உள்ள நாராயாணா ஹ்ருதாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதற்கிடையே அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து திமுக அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், சக்கரபாணி உள்ளிட்டோர் காரிமங்கலம் தனியார் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால், பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூரண நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பெங்களூர் மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாரடைப்பு தொடர்பான அறிகுறிகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது பெங்களூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய மருத்துவஅறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அன்பில் மகேசுக்கு வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில் நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். ப்ளூட்ஸ், வலி நிவாரணிகள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக உள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திமுகவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications