எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!
பெங்களூர்: உகாண்டா சென்றுவிட்டு இந்தியா திரும்பிய ஒரு பெண்ணுக்கு எபோலா தொற்று இல்லை என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆப்பிரிக்காவில் எபோலா நோய் தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் செய்தி பொதுமக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், உலக சுகாதார அமைப்பு (WHO) சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையை (PHEIC) அறிவித்துள்ளதால், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் உள்ளது.

சென்னையில் கொரோனா
இதற்கிடையில் சென்னையில் கடந்த சில வாரங்களாக லேசான கொரோனா (COVID-19) தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் பல மருத்துவர்கள், கொரோனா பரிசோதனையில் பாசிடிவ் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகக் கூறினர். இருப்பினும், பெரும்பாலான பாதிப்புகள் லேசான அறிகுறிகளுடன் மட்டுமே உள்ளன.
பெங்களூரு வந்த பெண்
உகாண்டா சென்றிருந்த பெண் பெங்களூருக்கு திரும்பியதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவருக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் எபோலா நோய் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மூலம், ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளை இந்தியா பெரிய அளவில் கண்காணித்து வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை
உலக சுகாதார அமைப்பு மே 17, 2026 அன்று எபோலா தொற்றை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக (Public Health Emergency of International Concern - PHEIC) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் பரவும் 'புந்திபுகியோ' (Bundibugyo) வகை எபோலா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து வந்தது.
காங்கோவின் இத்துரி, வடக்கு கிவு மற்றும் தெற்கு கிவு மாகாணங்களில் இந்தத் தொற்று மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. காங்கோவில் இருந்து பயணம் செய்தவர்கள் மூலம் உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவுக்கும் தொற்று பரவியுள்ளது.
தொற்றின் தீவிரம் மற்றும் பாதிப்பு
தற்போது காங்கோவில் 120க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், 1,000க்கும் மேற்பட்ட பேர் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்தத் தொற்றால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்த 'புந்திபுகியோ' வகை எபோலா வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி அல்லது பிரத்யேக சிகிச்சை மருந்து இல்லை என்பது கூடுதல் கவலையை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்று பரவுவதைத் தடுக்க சுகாதார நடவடிக்கைகளும், பயணக் கட்டுப்பாடுகளும் உலக நாடுகளால் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எச்சரிக்கை
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் மீது சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு செய்து வருகிறது. விமான நிலையங்களில் ஸ்கிரீனிங், அறிகுறிகள் இருப்பவர்களுக்கு உடனடி பரிசோதனை, தேவைப்பட்டால் தனிமைப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. காய்ச்சல், உடல் வலி, வயிற்றுப்போக்கு, இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications