இந்தி தெரியாது போடா.. கர்நாடகாவில் நாளை இந்தி தினம் கொண்டாட மாஜி முதல்வர் குமாரசாமி கடும் எதிர்ப்பு!
பெங்களூர்: கர்நாடகாவில் மாநில பாஜக அரசால் நாளை இந்தி தினம் கொண்டாடுவதற்கு அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு நாளை இந்தி மொழி நாளாக கொண்டாட உள்ளது. இதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜேடிஎஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு அனுப்பிய கடிதம்: கர்நாடகாவில் இந்தி மொழி தினம் கொண்டாடுவது என்பது கன்னட மொழி பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். கன்னட மொழி பேசும் மக்களின் வரிப்பணத்தில் எதற்காக இந்தி தினத்தை கொண்டாட வேண்டும்?
560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள், பல்லாயிரக்கணக்கான மொழிகள் என அத்தனையும் ஒருங்கிணைந்ததுதான் இன்றைய இந்திய ஒன்றிய அரசு என்பது. அப்படியான நிலையில் ஒரு குறிப்பிட்ட மொழிக்கு மட்டும் எதற்காக முன்னுரிமையும் முக்கியத்துவமும் தர வேண்டும்? இது மிகவும் அநீதியானதாகும்.
பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தில் ஒரு மொழியை அம்மொழி பேசாத மக்களிடத்தில் திணிக்கக் கூடாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகா பாஜக அரசு இந்த முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.
யோகி அல்ல.. ஆயிரம் மோடி வந்தாலும்.. கர்நாடகாவில் எதுவும் பலிக்காது.. குமாரசாமி அதிரடி!
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ந் தேதி இந்தி மொழி தினம் விவகாரம் கர்நாடகாவில் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டுதான் இருக்கிறது. தேசிய மொழியாக இந்தியை மெண்மையாக திணிப்பதுதான் இந்தி திவாஸ் என்கிற இந்தி மொழி தினத்தின் நோக்கம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும்தான் மத்திய அரசு கொண்டாட வேண்டும் என்பது கர்நாடகாவில் பொதுவாக முன்வைக்கப்படும் கோரிக்கை.
கடந்த சில மாதங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழி குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல- ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.