8 முறை வெறி தீர குத்தி கொன்ற மனைவி! சொத்துதான் காரணமாம்! கர்நாடக மாஜி டிஜிபி கொலையில் விலகும் மர்மம்
பெங்களூர்: கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவரது மனைவி முதற்கட்டமாக கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சொத்து பிரச்சனைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்த கொலை தொடர்பாக விசாரணை இன்னும் முழுமையடையவில்லை. எனவே, விசாரணையின் முடிவில்தான் முழு உண்மையும் தெரிய வரும்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாலை 5 மணியளவில் டோம்லூர் கேரளா கால்ஃப் கிளப்பில் விளையாடிக்கொண்டிருந்த கார்த்திகேஷ் எனும் இளைஞருக்கு ஒரு போன் கால் வருகிறது. இதனையடுத்து பதற்றமடைந்த அவர் பெங்களூரில் உள்ள ஹெச்ஆர் லேஅவுட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவரது தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ஓம் பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கிறார். அவரை சுற்றி காவல்துறையினர் குவிந்திருக்கின்றனர்.
உடனடியாக ஓம் பிரகாஷை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனையடுத்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் இது கொலை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலதிக விசாரணையில் கொலைக்கான காரணம் தெரிய வந்திருக்கிறது.
அதாவது கொல்லப்பட்ட ஓம் பிரகாஷுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடையே சமீப காலமாக தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வந்திருக்கின்றன. இது சில நாட்களாக தீவிரமடைந்திருக்கிறது. தனது கணவர் தன் தலையில் கை துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக பல்லவி ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டிருக்கிறார். அதேபோல ஓம் பிரகாஷுக்கு பல்லவி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சண்டைக்கு காரணம் நிலம் ஒன்றை ஓம் பிரகாஷ் தனது சகோதரியின் பெயரில் பதிவு செய்ததுதான் என்று கூறப்படுகிறது. இந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என்று மனைவி பல்லவி வற்புறுத்தியுள்ளார். ஆனால், இதை கேட்காத ஓம் பிரகாஷ் மற்றொரு நிலத்தை அவரது மகன் கார்த்திகேஷ் பெயரில் பதிவு செய்திருக்கிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே பல்லவி சென்றிருக்கிறார். சொத்தை தான் மட்டுமே நிர்வகிக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருந்த நிலையில், அது பங்கிடப்பட்டது அவருக்கு பிடிக்கவில்லை.
விஷயம் மிகவும் சீரியஸாக இருப்பதை உணர்ந்த ஓம் பிரகாஷ் தனது சகோதரி வீட்டிலேயே இருந்திருக்கிறார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அவரது மகள் போன் செய்து வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார். அங்குதான் அந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது. கத்தியை பயன்படுத்தி சுமார் 7-8 முறை வரை ஓம் பிரகாஷை மனைவி பல்லவி குத்தியிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த கர்நாடக உள்துறை அமைச்சர், "ஓம் பிரகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய மனைவி பல்லவி செய்திருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. ஆனால் முழுமையான விசாரணைக்கு பிறகுதான் உண்மை தெரிய வரும்" என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக மகன் கார்த்திகேஷ் கூறுகையில், "அம்மா கடந்த ஒரு வாரமாக மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். அப்பாவை கொன்றுவிடுவதாக மிரட்டி வந்தார். எனவேதான் அப்பா அவரது சகோதரியின் வீட்டுக்கு சென்றுவிட்டார். 2 நாட்களுக்கு முன்னர்தான் அவர் வீட்டிற்கு வந்தார். நான் அவரை பார்க்கும்போது அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்" என்று கூறியுள்ளார்.
சொத்துக்கான முன்னாள் டிஜிபி ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications