‛‛ரூ.50 லட்சம்’’.. தேர்தலில் விலக ஜேடிஎஸ் வேட்பாளரிடம் பேரம்!சிக்கிய பாஜக அமைச்சர்! அதிரடி நடவடிக்கை
பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையாவை எதிர்த்து வருணாவில் களமிறங்கி உள்ள பாஜக அமைச்சர் சோமண்ணா தான் போட்டியிடும் மற்றொரு தொகுதியான சாமராஜநகரில் தோல்வி பயத்தில் ஜேடிஎஸ் வேட்பாளரின் வேட்புமனுவை வாபஸ் பெற பேரம் பேசிய ஆடியோ வெளியானது. இதனால் அவர் வசமாய் சிக்கிய நிலையில் தற்போது அவர் மீது தேர்தல் ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருப்பவர் சோமண்ணா. இவர் கடந்த தேர்தலில் பெங்களூர் கோவிந்தராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் சோமண்ணா இந்த முறை பாஜகவில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

ஒன்று மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடுகிறார். இன்னொன்று சாம்ராஜ்நகர் தொகுதியாகும். இதன்மூலம் சொந்த தொகுதியான கோவிந்தராஜ் நகரை விட்டு அவர் முற்றிலுமாக வெளியேறி உள்ளார்.
மேலும் தற்போது அவர் போட்டியிடும் தொகுதிகளில் சோமண்ணாவை வெளிநபராக வாக்காளர்கள் பார்க்கின்றனர். இதனால் 2 தொகுதிகளிலும் அவர் பின்னடைவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமராஜ் நகர் தொகுதி ஜேடிஎஸ் வேட்பாளர் மல்லிகார்ஜூன சாமியிடம் வேட்புமனுவை வாபஸ் பெற கோரி அமைச்சர் சோமண்ணா பேசியதாக ஆடியோ வெளியானது.
அதாவது வேட்புமனுவை வாபஸ் பெற கடைசிநாளான கடந்த 24ம் தேதி அமைச்சர் சோமண்ணா, சாம்ராஜ்நகர் தொகுதி ஜேடிஎஸ் வேட்பாளர் மல்லிகார்ஜூன சாமியை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, நீங்கள்(மல்லிகார்ஜூன சாமி) தேர்தலில் மனுவை வாபஸ் பெற்று பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதில் யாருடைய பேச்சையும் கேட்க வேண்டாம்.
வேட்புமனுவை மட்டும் திரும்ப பெறுங்கள். உங்களின் எதிர்காலத்தை நான் பார்த்து கொள்கிறேன். இந்த உறுதியை நான் உப்பார் கோவிலின் உள்ளே இருந்தபடி கொடுக்கிறேன். ரூ.50 லட்சம், அரசு கார் கிடைக்க வழி செய்கிறேன்'' என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கேட்ட மல்லிகார்ஜூன சாமி மனுவை வாபஸ் பெற மறுத்தார். மேலும் அமைச்சர் சோமண்ணா தன்னிடம் மனுவை வாபஸ் பெற கூறியதாக மல்லிகார்ஜூன சாமியும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு அமைச்சர் சோமண்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தான் தற்போது கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‛‛சமூக வலைதளங்களில் சாமராஜநகர் தொகுதி பாஜக வேட்பாளர் சோமண்ணா, ஜேடிஎஸ் வேட்பாளர் மல்லிகார்ஜூன சாமி இடையேயான நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ விவகாரத்தை சீரியஸாக இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து கொண்டுள்ளது. தேர்தலை அமைதியான முறையில், அதேநேரத்தில் நேர்மையாக நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சம்பவம் குறித்த புகாரின் பேரில் சாமராஜநகர் போலீசார் அமைச்சர் சோமண்ணா மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தக்கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications