தனி அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.. எடியூரப்பா மீது சிறுமி புகார்.. பாய்ந்தது போக்சோ
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெங்களூர் சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த 17 - வயது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடியூரப்பா மீது பாலியல் புகார்: அதாவது, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி கல்வி தொடர்பாக உதவி கேட்டு தாயாருடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்றதாகவும் அப்போது தனக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி புகார் அளித்துள்ளார். தன்னை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை வெளியில் கூற வேண்டாம்.
போக்சோ சட்டத்தில் வழக்கு: உனக்கு தேவையான உதவிகளை செய்கிறேன். இதையும் மீறி வெளியே கூறினால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எடியூரப்பா மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூர் சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் எடியூரப்பாவிற்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பாலியல் தொந்தரவு குறித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பா மீதான இந்த புகார் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 முறை கர்நாடக முதல்வர்: கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் எடியூரப்பா மூன்று முறை கர்நாடக முதல்வராக பதவி வகித்துள்ளார். அதாவது, 2008 ஆம் ஆண்டு முதல் 2011 வரையும் பிறகு மே மாதம் 2018ல் குறுகிய காலமும் அதன் பிறகு 2019 ஜூலை -2021 வரையும் முதல்வராக பதவி வகித்து இருக்கிறார். அதன்பிறகு பிறகு பாஜக தலைமை அழுத்தம் காரணமாக 2021 ஆம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகினார்.
எடியூரப்பா பதவி விலகிய பிறகு பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்தது. தற்போது எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கர்நாடக மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications