எம்.எல்.சி. ஆனார் மாஜி பிரதமர் தேவகவுடாவின் பேரன்; ஒரே குடும்பத்தில் 8-வது அரசியல் வாரிசு!
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் சூரஜ் ரேவண்ணா, கர்நாடகா சட்ட மேலவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.சி.யாகி உள்ளார். தேவகவுடா குடும்பத்தில் இருந்து அரசியலுக்குள் நுழைந்துள்ள 8வது நபர் சூரஜ் ரேவண்ணா.
கர்நாடகா சட்டமேலவையில் 25 இடங்களுக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 20 மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே இத்தேர்தலில் வாக்காளர்கள். சட்டமேலவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் சூரஜ் ரேவண்ணா போட்டியிட்டார். அப்போது வாரிசு அரசியல் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தேவகவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தாலேயே சூரஜ் ரேவண்ணா வேட்பாளராக நியமிக்கப்பட்டார் என்றார். இதனைத் தொடர்ந்தே சூரஜ் ரேவண்ணா, வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

சூரஜ் ரேவண்ணாவின் தந்தை முன்னாள் அமைச்சரும் தேவகவுடாவின் மகன்களில் ஒருவருமான ரேவண்ணா. சட்டமேலவைத் தேர்தலில் 1,433 வாக்குகள் வித்தியாசத்தில் சூரஜ் ரேவண்ணா வெற்றி பெற்றார். தற்போதைய நிலையில் தேவகவுடா குடும்பத்தைச் சேர்ந்த 8-வது நபர்தான் சூரஜ் ரேவண்ணா.
தேவகவுடா, அவரது மகன் முன்னாள் முதல்வர் குமாரசாமி, முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, குமாரசாமி, ரேவண்ணா மனைவிகள், சூரஜ் ரேவண்ணாவின் சகோதரர் என தேவகவுடா குடும்பத்தினரது அரசியல் வாரிசுகள் பட்டியல் நீளமானது. தற்போது இந்த பட்டியலில் சூரஜ் ரேவண்ணாவும் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications